More than a Blog Aggregator

Dec 26, 2011

 நீராதேவி




நீராதேவி
யாருக்கும் சொந்தமில்லாதவள்.

நிறமில்லாமலிருக்கும் அவளிடம்
எந்த வாசனைகளுமில்லை.
சுவைகளும் இல்லை.

ஆனால்...
நிறங்களோடும்
வாசனைகளோடும்
சுவைகளோடும் வருகிற மனிதர்கள்
அவளை உறிஞ்சி இழுக்கிறார்கள்.

அவளோ பேதம் பார்க்காமல்
எல்லோருக்கும்
தன்னை பருகக் கொடுக்கிறாள்.
அவளை அள்ளுபவர்களும்
கிள்ளுபவர்களும் தான்
தங்களுக்குள் பேதம் பார்க்கிறார்கள்.

நீராதேவி பயணிக்கிறபோது
அவளை வழிமறித்து அணைக்கிறவர்கள்
தங்களுக்கென
அவளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அவளிடத்தில் தாகம் தணிப்பவர்கள்
அவள் யாருக்கென்ற போட்டியில்
தங்களுக்குள் உரசிக்கொண்டு
நெருப்பு மூட்டுகிறார்கள்.
இருபக்கமும் நின்று
மாறி மாறி கத்துகிறார்கள்.
பாதைகளை இழுத்து மூடிக்கொண்டு
பதாகைத் தடிகளால் அடிபடுகிறார்கள்.
இரத்தம் இறைக்கிறார்கள்.
பொங்கிக் குதிக்கிறார்கள்.

யாருக்கும்
உரித்துடையவள் ஆகமுடியா
நீராதேவி பொறுமையோடு இருக்கிறாள்.

எங்கள் எல்லோருக்கும்
நன்றாகவே தெரியும்.
அவள் பொங்கியெழுந்தால்
எப்படி இருக்குமென்று.

-----xxx------

தீபிகா.
22.12.2012
1.13 P.m


* 2004-12-26 - (சுனாமி நாள்)
* 2011-12-26 - ( 7ம் ஆண்டு நினைவு வலிநாள்)








Dec 22, 2011

மனசுக்குள் வளரும் ஆலமரம்




ஒற்றைக்கால் கொண்ட
பச்சைக் கம்பளக் கட்டிலாய்
விசாலித்திருக்கிற ஆலமரம்
பெருமைகள் நிறைந்துவழிய
தன் சாதனைச் சொற்களை
என் செவிகளுக்குள் திணித்தது.

தான்
வெயில் வாங்கி நிழல் கொடுப்பதாய்...
வேர்வைத்துளிகளை காய வைப்பதாய்...
மழைக்கு பெருங்குடை பிடிப்பதாய்...
குருவிக் குஞ்சுகளுக்கு பிரசவ விடுதியாயும்...
அணில்பிள்ளைகளுக்கு
விளையாட்டு மைதானமாயும்
இருப்பதாய் விலாசமடித்ததது.

வென்றதும் தோற்றதுமான
பல காதல்கள்
முதன்முதலில் தன் மேனியிலேயே
பதிவு பண்ணிக்கொண்டதாக
தழும்புகள் காட்டியது.

சிறுவர்கள் ஊஞ்சலாட
விழுதுகள் கொடுப்பதாயும்..
பெருசுகளிருந்து புகையிழுத்து விட
வேரடிகளை கொடுப்பதாயும்...
ஆச்சியொருத்தி கச்சான் விற்க
குளி்ர்மையான இடம் கொடுப்பதாயும்
சுய விளம்பரம்செய்தது.

தன் சாதனைகளை
சலசலத்துக் கொண்டிருந்த
ஆலமரத்தின் நிழலுக்கு கீழே
பறவை விழுத்திய எச்சத்துக்குள்ளிருந்து
முளைவிட்டு கருகிக் கொண்டிருந்த விதை
குற்றம் சாட்டியது.

ஆலமரம்
தனக்கு கீழிருக்கும் எதையும்
வளரவிடாது தடுப்பதாய்.


தீபிகா
02.12.2011
1.58 Pm.

Dec 20, 2011

எனது பிள்ளையின் காணி



போகவும் வரவும்
நான் பார்த்துக்கொண்டு போகிற
எனது பிள்ளையின் காணியை
இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
எனது பிள்ளையும்
அவனது நன்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.

பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.

எந்த உறுதிகளையும்
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.

அங்கே
எனது பிள்ளையும் அவனது நன்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.

எனது பிள்ளைகளுக்கான நேரத்தில்
ஆலயங்களெதிலும்
தீபம் காட்டி மணியடித்து
அர்ச்சனை செய்விக்கமுடியாதபடி
நான் வாழும் நிலத்தையும்
இவர்கள்
ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-------xxx----------



தீபிகா
29.11.2011
2.31 P.m

Dec 1, 2011

"விதைமண்ணிலிருந்து பேசும் ஆன்மாக்கள்”


நீங்கள்
தனித்தனியே விதைத்து வைத்த
எம் வித்துடல்களை கிளறியெறிந்து
மீண்டுமெம் ஆன்மாக்களை
மண்கும்பியாக்கி ஒன்று சேர்த்துவைத்திருக்கிறார்கள்
நம்மை வெறுப்பவர்கள்.

எமது மூச்சுக்களில் நிறைந்திருக்கும்
நமது கனவுகள்
மண்களினடியால் ஆழமாய் கீழிறங்குகின்றன.

நீங்கள்
எமக்காய் அன்று கொழுத்திவைத்த
சந்தனப்புகை வாசங்களும்
தூவிவி்ட்ட பூக்களின் நறுமணங்களும்
இன்னும்
நிறைந்திருக்கின்றன நம் மண்ணில்.

எம்மையும்
எமது விருப்பங்களையும் சேர்த்து
நெஞ்சில் சுமக்கும் சொந்தங்களே!
கட்டியெழுப்புங்கள்.
எமது கல்லறைகளை அல்ல.
நமது கனவுகளை.
விளக்கேற்றுங்கள்.
எமது விதைகுழிகளில் அல்ல.
எமது பெயரால் உமது மனதுகளில்.
ஆண்டுக்கொரு மரம் நடுங்கள்
உங்கள் வீட்டின் ஏதொவொரு ஓரத்தில்.
அதிலசையும் ஈரக்காற்றோடு
நாமும் உயிர்தொடுவோம்.

கார்த்திகை மாதத் திருநாளில்
எமை நினைத்துருகி
கண்மழை பொழியுமெம்
மண்மடி உறவுகளே!
எங்கள் யாவருக்குமாய்
நாமெம் இளமைகளை தொலைத்தோம்.
உறவு துறந்த பிரிவு சுமந்தோம்.
வலி தாங்கித் தாங்கி வாழ்ந்தோம்.
தேகமதில் வீரவடுப் பட்டோம்.
பின்னொரு நாளில்
நிறைவேறாத இலட்சியங்களோடு
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றன் பின் ஒன்றாய்
விதைகளாகிப் புதைந்தோம்.

எம் பிரிவின்
வலி சொல்லிச் சொல்லியழும்
ஈரமிகு நெஞ்சுகளே!
எமை தெரியாமலேயே
எமக்காய் கைகூப்பித் தொழும்
வீரமிகு பிஞ்சுகளே!
வாழுங்கள்.
எங்களுக்காய் வாழுங்கள்.
எமது கனவுகளுக்காய் போரிடுங்கள்.
நாம் கேட்கும் நீதிச் சுதந்திரம் பற்றி
தொடர்ந்து சொல்லுங்கள்.
எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை
மறுக்கப்படும் உரிமைகளை
சத்தமாக உரத்துக் கூறுங்கள்.

எமை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு
எங்களில் ஒருவராய்
நீங்கள் இருக்கிறீர்கள் எனும்
நம்பிக்கை கொடுங்கள்.
காலச்சறுக்கலில் சிறைப்பட்டுப் போன
எம் தோழர்களை
அங்கிருந்து வெளியே மீட்டெடுங்கள்.
மீண்டுவந்த காயப்பட்ட மனசுகளுக்கு
கருணை காட்டுங்கள்.
கை தூக்கி உயர்த்தி விடுங்கள்.

உறுப்பிழந்த உறவுகளுக்கு
ஊன்றுகோல்களாகி உதவுங்கள்.
இருள்சுமக்கும் நிலவுகளுக்கு
வாழ வழி காட்டுங்கள்.
யாரும் கேட்காமலேயே
ஒளிதரும் மின்மினியாய்
தேடிப்போய் வெளிச்சம் கொடுங்கள்.
ஆதரவற்றுப் போன தனிமரங்களுக்கு
நிழல் கொடுத்து அரவணையுங்கள்.

ஒற்றுமையாய் இருங்கள்.
எங்களின் பெயரால் ஒற்றுமையாயிருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாய்...
உங்கள் குழந்தைகளுக்கு
எம் தேசவரலாறு சொல்லிக்கொடுங்கள்.
எங்கெங்கு வாழ்ந்தாலும்
எம் தமிழ்மொழியை
கற்பித்துக் கொடுங்கள்.
நம்
தமிழை ...
தாய் நிலத்தை ...
பண்பாட்டை ...
எப்போதும் நேசிக்க கற்றுக் கொடுங்கள்.


நாமென்றும்
உங்களோடே இருப்போம்.
எங்கள் எல்லா சந்ததிகளோடும்.


------ xx -------

தீபிகா.
25.11.2011.
12.05am