More than a Blog Aggregator

Jul 12, 2013

பிரச்சாரகி



பிரச்சாரகி


தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கும்
கவர்ச்சி வார்த்தைகளை
வெயிலின் சுமை தாங்கிய படி
கால்கடுக்க நின்று கொண்டு
அந்தப் பெண் எல்லோருக்கும்
இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

உதாசீனப்படுத்திக் கொண்டும்
புறக்கணித்துக் கொண்டும்
சிலவேளைகளில்
வசவுகளை வழங்கிக் கொண்டும்
கடந்து போகிற எல்லா முகங்களிடமும்
மனனம் செய்து வைத்திருக்கிற
அந்த இரவல் சொற்களை
அவளுடைய குரல் எந்த உணர்ச்சிகளுமற்று
சலிக்காமல் இறைத்துக் கொண்டேயிருக்கிறது.

அவளுக்குச் சொந்தமில்லாத
அந்த வார்த்தைகளின் சத்தியத்தன்மை பற்றி
அவளுக்கு எதுவுமே தெரியாது.
அளவுக்கு மிஞ்சிய ஒப்பனைகளோடு
வீதியில் இறக்கிவிடப்பட்டிருக்கும்
பரப்புரை வாக்கியங்களுக்கான
அந்த ஆடம்பரப் பொருட்களை
அவளுடைய கைகள்
ஒருபோதும் தடவிப் பார்த்ததுகூட இல்லை.

அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாக்கு வரள தான் உச்சரித்துக் கொண்டிருக்கும்
அந்த வார்த்தைகள் தான்
தன்னுடையதும்...
தன்னுடைய குழந்தையினதும்...
வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றன
என்ற உண்மை மட்டும்.

---xxx----

தீபிகா
09-07-2013
10.04 Am

Jul 9, 2013

மண்ணவன்

மண்ணவன்

ஒரு யுத்தத் தோல்வியில் 
சரணடைந்து கொண்ட அவனை
சீருடையில் காணப்பயந்த அவர்கள்
நிர்வாணமாக்கி நிறுத்தினார்கள்.

அப்போதும்
விடுதலையின் தாகமெரிந்து கொண்டிருந்த
அவன் விழிக்கிடங்குகளை பார்க்க அஞ்சியவர்கள்
கண்களை துணி கொண்டு கட்டினார்கள்.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்தி
சுடப்போவதாகக் கத்தியவர்களின் முன்னால்
அவன் கையெடுத்துக் கும்பிடாததால்
கைகளை பின்னால் பிணைத்துக் கட்டினார்கள்.

மரணத்துக்குப் பயந்த எந்த வார்த்தைகளையும்
அவன் உச்சரிக்க மறுத்ததால்
துப்பாக்கிப் பிடியால்
பற்களை நொருக்கிக் கொட்டினார்கள்.

இரத்தம் ஒழுகிற வாயோடு
அவன் அமைதியாக இருந்தான்.
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல.

ஆட்காட்டிக் குருவி
சாவுப்பாடலை அலறத் தொடங்கியிருந்த
ஒரு நள்ளிரவில்
பச்சைப் புற்களில் ரத்தம் பிசுபிசுத்த
சப்பாத்துப் பாதை வழியாக
அவர்கள் அவனை
பலிக்களத்துக்கு இழுத்துப் போனார்கள்.

நிலவு பார்த்துக் கொண்டேயிருக்க
அவனுடைய உயிர்ப் பூவை
பிடரியின் வழியாக அவர்கள் கொய்த போது
அவனது தாய் முத்தமிட்ட
நெற்றிப் பொட்டிலிருந்து
தாயின் குங்குமநிறக் குருதி வழிந்தோடியது.

அடுத்த பூவை இழுத்து வருவதற்கு
கோழைகள் திரும்பி நடந்தார்கள்.

விழுந்து கிடந்த வீரனின்
இறுகப் பொத்திய கைவிரல்களுக்கிடையால்
கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது
அவனது தாய் மண்.

---xxx---


தீபிகா
22-06-2013
06.05 P.m

Jul 8, 2013

பிரிவுக்கு தெரிந்தது


பிரிவுக்கு தெரிந்தது

யாருமற்றஇரவில்
தனித்திருக்கும் நிலவின் கண்களை
ஒரு தூக்கம் துரத்தப்பட்ட விழிகளோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னூர் தெரிந்தது.
எருமைகள் படுத்திருக்கும் வயல்களில்
முதுகுகளில் விருந்துண்டு கொண்டிருந்த
வெள்ளைக் கொக்குகள் தெரிந்தன.
அறுகம்புல் படங்கு விரித்திருந்த
ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அதில் தடயமிழுத்துப் போய்க் கொண்டிருந்த
நாக்கிளிப்புளு தெரிந்தது.
காகத்தின் எச்சத்தடம் காய்ந்திருந்த
வீட்டின் மரப்படலை தெரிந்தது.
அரிசிமா வறுத்த அடுப்படிச் சாம்பலுக்குள்
சுருண்டு கிடந்த பூனையின் வால் தெரிந்தது.
கிணற்றடிப் பாசிப்பூக்கள் தெரிந்தன.
மாமரத்தில் குடியிருந்த அணிலின் வீடு தெரிந்தது.
கொடியில் தனிமையாய் தொங்கிய
உடுப்புக் கொழுவிகள் தெரிந்தன.
அணிலரித்து மிச்சம் விட்ட
பழுத்த கொய்யாப்பழப் பாதி தெரிந்தது.
ஒன்றிரெண்டு செவ்வந்திப் பூக்கள் தெரிந்தன.
இருமிக் கொண்டு படுத்திருந்த
அப்பாவின் பித்தை வெடித்த கால்கள் தெரிந்தன.
நிலவு விழுந்து பளபளத்த
அம்மாவின் சுருங்கிய முகத்தில்
ஒரு தெய்வத்தின் சாயல் தெரிந்தது.
பிறகெதுவும் தெரியவில்லை.
என் கண்ணீரைத் தாண்டி.

---xxx---

தீபிகா
07-07-2013
10.06Am

Jul 6, 2013

தகவல்யுகத்து மரணங்கள்



தகவல்யுகத்து மரணங்கள்


அவன்
நாளைய பத்திரிகைகளில்
தடித்த எழுத்துடன் தலைப்புச் செய்தியாவான்.
வாராந்த இதழ்களின் முகங்களில்
தன்முகம் காட்டியபடி எங்கும் தொங்குவான்.
செய்வதறியா பார்வையாளனாய்
முகப்புத்தகம்
ஆனமட்டும் தன்மேனியெங்கும்
அவன் பதிவுகளை நிறைத்துக் களைக்கும்.
அவனூரில் தடையுத்தரவு பிறப்பித்து
தன்னிருப்பை சரிபார்த்துக்கொண்டு ஆட்சியடங்கும்.
நீதியான விசாரணை வேண்டுமென்று
கட்சிகள் அறிக்கையிடும்.
வானொலிகள் அவனின் இழப்புச் செய்தியை
வேகமாக வாசித்துக் கொண்டு கடந்து செல்லும்.
ஏதோவொரு தொலைக் காட்சி
அவனின் சாவுடலை நேரலையில் ஒளிபரப்பும்.
நண்பர்கள் கண்ணீர் அஞ்சலியடித்து
மதிற்சுவர்களெங்கும் ஒட்டுவார்கள்.
அவன் முகம் பின்னணியில் மெதுவாயோடும்
நேரலை விவாதத் திரையில்
கருத்தாக்கள் வந்தமர்ந்து
ஒரு மணி நேரம் பேசிச் செல்வர்.
அடுத்தடுத்த வாரங்களில்
அவனுடைய அம்மாவின் கதறல் பேட்டி
அவளின் கண்ணீர் முகத்துடன் வெளிவரும்.
சில வேளைகளில்
அடுத்த மாத நீயா நானாவில்
அவன் பெயரடிபடும்
ஒரு பொது விவாதமும் நடந்து முடியும்.
அவனை நேசித்த உறவுகளின் இதயங்கள்
அவனைப் பற்றிய அழுத்தும் நினைவுகளை
கண்ணீர்வழி கீழிறக்கி வைத்து
மெல்ல மெல்ல விடுபட்டு வெளிவரும்.

அவ்வளவும் தான்.

அத்துடன்
அவனை எல்லோரும் மறந்து போய்
அடுத்துவரும்
இன்னொரு பரபரப்பான முகத்தை
சுமந்து செல்ல தயாராகிவிடுவார்கள்.

---xxx---


தீபிகா
04-07-2013
07.57 Pm.

Jul 4, 2013

நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்



நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்


உயிர் தந்த பிரமனே!
நாங்களே எல்லாத் தற்கொலைகளுக்கும்
காரணமாக இருக்கின்றோம்.
குற்றவுணர்வுள்ள சாட்சிகளாகவுமிருக்கின்றோம்.

எங்கள் ஜாதிவெறியின் நெருப்புப் பார்வையை
எதிர்கொள்ள முடியாத திவ்யாவின் தந்தையை
நாங்கள்
அவமானம் தாங்காமல் சாகும்படி
வழிநடத்திக் கொன்றோம்.

கிராமங்களுக்கு
அக்கினிப் பூவை பரிசளித்து விட்டு
எங்கள் ஜாதிப்பூவை
கருகிய வீடுகளுக்கு மேலாக
மலரச் செய்து புன்னகைத்தோம்.

தந்தையை இழந்த காதலியை
வெருட்டி...மருட்டி...
வெளித் தெரியாத எல்லா சூழ்ச்சிப் பொறிகளாலும்
வசியப்படுத்திப் பிரித்தோம்.
எங்கள் வெறிப்பிடித்த இலட்சியங்களை
ஒரு பொம்மையாக மாறி
திவ்யா உச்சரிக்கும்படியாக செய்தோம்.

குருட்டு நியாயங்களுக்கு முன்னால்
எங்கள் எல்லா சோடித்த வார்த்தைகளையும்
வெற்றி பெறச் செய்து
காதலியை பிரித்துக் கொண்டு வந்தோம்.

சலவை செய்த மூளையோடு
ஜாதிப் போர்க்களத்தில்
நாங்கள் அவளை களமிறக்கினோம்.
அவளது வார்த்தைகளாலேயே
அவளது காதலனைத் தோற்கடித்தோம்.
இந்தோ
இளவரசனை சாகடித்தும் விட்டோம்.

இனி
தந்தையில்லாத திவ்யா
இளவரசனில்லாத திவ்யா
எப்படி வாழ்வாளோ தெரியாது.
அதுபற்றி எங்களுக்கு கவலையும் கி்டையாது.

நாங்கள்
ஜாதியை வெற்றி பெறச் செய்து விட்டோம்.
எங்களுக்கு அது போதும்.

தோற்றுப் போன காதல் பற்றி
செத்துப் போன உயிர்கள் பற்றி
எங்களுக்கு எந்த கவலைகளுமே இல்லை.

காதலுக்கு...
எங்களுக்கு இந்தியாவில்
தாஜ்மகால் இருக்கிறது.
சினிமா இருக்கிறது.

நாங்களதை அங்கு வாழவைத்துக் கொண்டிருப்போம்.

---xxx----

தீபிகா
04-07-2013
05.32 Pm.


தொடர்புடைய செய்தி இணைப்பு -  http://www.envazhi.com/dharmapuri-divyas-husband-ilavarasan-dead-body-found-at-track/



Jul 2, 2013

சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


எமது குழந்தைகள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களறியா
அவர்களுக்கான சுதந்திரப் புல்வெளிகளில்
விளையாட ஆட்களற்று
வண்ணத்துப் பூச்சிகள் சோர்ந்து போயிருக்கின்றன.

ஒரு சிறிய தொட்டியறைக்குள்
சிறைவாழுமெம் குழந்தைகளுக்கு
நண்பர்களாக இருக்கிறார்கள்.
மிகச்சிறிய கண்ணாடித் தொட்டிக்குள்
அடைபட்டுக் கிடக்கும் வண்ணமீன்கள்.

விழித் திரைகள் ஒடுக்கப்பட்ட குழந்தைகள்
சிறையின் மின்சார வெளிச்சங்களில்
ஒளியற்று தனித்திருக்கிறார்கள்.

வெளியே
பாட்டுப்பாட குழந்தைகளில்லா நிலவு
அவர்களுக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.
மிக்கி மவுசையும், டோறாவையும் தவிர
வேறெதையும் அடையவிடாது தடுக்கிறது
அவர்களின் சிறையுலகு.

அவர்களொரு போதும்
ஒரு எறும்பின் வரிசையை
பின் தொடர்ந்து போனதேயில்லை
ஒரு மாமரக் குயிலுக்கு
பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுமில்லை.
வண்ணத்துப் பூச்சியொன்றின் மஞ்சளையேனும்
கைவிரல்களால் தீண்டிப் பார்த்ததும் கிடையாது.
ஒரு நாய்க்குட்டியின் வாலில்
ஈர்க்கால் அடித்து அழவைத்துப் பார்க்கவுமில்லை.

புத்தகப் பைகளை மட்டுமே சுமக்கும்
அவர்களின் முதுகுகள்
இதுவரையொரு போதும்
உப்புமூட்டை சுமந்து மகிழ்ந்ததேயில்லை.

கூட்டுக் கோழிகளாய் ஒடுக்கியிருக்கின்ற
மண்படாக் குழந்தைகளின் கால்கள்
மழையைப் பார்த்து அஞ்சுகின்றன.
ஒரு மாடு புல்லுண்பதைக் கூட
குழந்தைகள் டிஸ்கவரி அலைவரிசையில்
அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கடலின் ஓவியத்தை
அலைகளைப் பார்த்திரா குழந்தை விழிகள்
ரசிக்க முடியாமல் திருப்பி விடுகின்றன.

கொக்கக் கோலாவை உறிஞ்சியிழுக்கிற
அவர்களின் பிஞ்சு உதடுகள்
வழுக்கல் செவ்விளநீரை
அலட்சியத்தோடு நிராகரிக்கின்றன.
தேங்காய்ப்பூ குழல் புட்டை
தொட்டுப் பார்க்காமலேயே ஒதுக்குகின்ற
அவர்களின் அவசர வயிறுகள்
நூடில்சுக்குள் சிக்குண்டு கிடக்கின்றன.
பனங்கிழங்கின் சுவையறியா
குழந்தைகளின் பற்களுக்கிடையில்
கொழுவுண்டு கிடக்கிறது லாலிப் பொப்

ஒரு சுண்டெலியைப் பிடித்தபடி
அவர்கள் சவாரிப் போட்டி செய்கிறார்கள்.
சமர்க்களங்களில் போர் புரிகிறார்கள்.
சாப்பாட்டுக் கடை நடத்துகிறார்கள்.
இன்னுமின்னும்
எல்லா சிறை விளையாட்டுக்களுக்கும்
அவர்களுக்கு சிறியதொரு ஒளிரும் திரைமைதானம்
போதுமானதாகவே இருக்கிறது.

எந்திரன்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்
எமது குழந்தைகளுக்கு
எப்போதேனுமொரு பொழுதொன்றில்
அன்னியர்களாகி விடக்கூடும்
பெற்றோரும் கூட.


---xxx----

தீபிகா
01-07-2013
11.29 Pm






Jul 1, 2013

நான் இன்னும் சாகவில்லை


நான் இன்னும் சாகவில்லை


பூக்களுக்காய் காத்திருக்கிற 
மலர்வளையங்களே
அஞ்சலிக்காய் காத்திருக்கிற 
அழுகைச் சொற்களே
பழையபடம் தேடி பதிவி்ட காத்திருக்கிற 
பதிவர்களே
RIP எழுதக் காத்திருக்கிற 
கருத்தாக்களே
சிறப்பு நிகழ்ச்சி தயார்ப்படுத்தி வைத்திருக்கிற 
தொலைக்காட்சியே
பின்னணி இசைக்கக் காத்திருக்கிற 
இழுவை ஒலியே
அட்டைப்படத்துடன் புத்தகம் அச்சிட
குறிப்பெடுக்கிற ஆசிரியரே
இடத்தை மிச்சம் வைத்திருக்கிற 
தினசரிகளே
விழிகளுக்குள் தேங்கியிருக்கிற 
கண்ணீர்த் துளிகளே

தயவுசெய்து 
கொஞ்சம் பொறுமையாயிருங்கள்.
நான் இன்னும் சாகவில்லை.


---xxx---

தீபிகா
27-06-2013
8.24 Am.