More than a Blog Aggregator

Jul 4, 2013

நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்



நாங்கள் செய்வித்த (தற்)கொலைகள்


உயிர் தந்த பிரமனே!
நாங்களே எல்லாத் தற்கொலைகளுக்கும்
காரணமாக இருக்கின்றோம்.
குற்றவுணர்வுள்ள சாட்சிகளாகவுமிருக்கின்றோம்.

எங்கள் ஜாதிவெறியின் நெருப்புப் பார்வையை
எதிர்கொள்ள முடியாத திவ்யாவின் தந்தையை
நாங்கள்
அவமானம் தாங்காமல் சாகும்படி
வழிநடத்திக் கொன்றோம்.

கிராமங்களுக்கு
அக்கினிப் பூவை பரிசளித்து விட்டு
எங்கள் ஜாதிப்பூவை
கருகிய வீடுகளுக்கு மேலாக
மலரச் செய்து புன்னகைத்தோம்.

தந்தையை இழந்த காதலியை
வெருட்டி...மருட்டி...
வெளித் தெரியாத எல்லா சூழ்ச்சிப் பொறிகளாலும்
வசியப்படுத்திப் பிரித்தோம்.
எங்கள் வெறிப்பிடித்த இலட்சியங்களை
ஒரு பொம்மையாக மாறி
திவ்யா உச்சரிக்கும்படியாக செய்தோம்.

குருட்டு நியாயங்களுக்கு முன்னால்
எங்கள் எல்லா சோடித்த வார்த்தைகளையும்
வெற்றி பெறச் செய்து
காதலியை பிரித்துக் கொண்டு வந்தோம்.

சலவை செய்த மூளையோடு
ஜாதிப் போர்க்களத்தில்
நாங்கள் அவளை களமிறக்கினோம்.
அவளது வார்த்தைகளாலேயே
அவளது காதலனைத் தோற்கடித்தோம்.
இந்தோ
இளவரசனை சாகடித்தும் விட்டோம்.

இனி
தந்தையில்லாத திவ்யா
இளவரசனில்லாத திவ்யா
எப்படி வாழ்வாளோ தெரியாது.
அதுபற்றி எங்களுக்கு கவலையும் கி்டையாது.

நாங்கள்
ஜாதியை வெற்றி பெறச் செய்து விட்டோம்.
எங்களுக்கு அது போதும்.

தோற்றுப் போன காதல் பற்றி
செத்துப் போன உயிர்கள் பற்றி
எங்களுக்கு எந்த கவலைகளுமே இல்லை.

காதலுக்கு...
எங்களுக்கு இந்தியாவில்
தாஜ்மகால் இருக்கிறது.
சினிமா இருக்கிறது.

நாங்களதை அங்கு வாழவைத்துக் கொண்டிருப்போம்.

---xxx----

தீபிகா
04-07-2013
05.32 Pm.


தொடர்புடைய செய்தி இணைப்பு -  http://www.envazhi.com/dharmapuri-divyas-husband-ilavarasan-dead-body-found-at-track/



2 comments:

Anonymous said...

சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

Anonymous said...

No one can express the intensity of the feelings

Post a Comment