More than a Blog Aggregator

Dec 1, 2011

"விதைமண்ணிலிருந்து பேசும் ஆன்மாக்கள்”


நீங்கள்
தனித்தனியே விதைத்து வைத்த
எம் வித்துடல்களை கிளறியெறிந்து
மீண்டுமெம் ஆன்மாக்களை
மண்கும்பியாக்கி ஒன்று சேர்த்துவைத்திருக்கிறார்கள்
நம்மை வெறுப்பவர்கள்.

எமது மூச்சுக்களில் நிறைந்திருக்கும்
நமது கனவுகள்
மண்களினடியால் ஆழமாய் கீழிறங்குகின்றன.

நீங்கள்
எமக்காய் அன்று கொழுத்திவைத்த
சந்தனப்புகை வாசங்களும்
தூவிவி்ட்ட பூக்களின் நறுமணங்களும்
இன்னும்
நிறைந்திருக்கின்றன நம் மண்ணில்.

எம்மையும்
எமது விருப்பங்களையும் சேர்த்து
நெஞ்சில் சுமக்கும் சொந்தங்களே!
கட்டியெழுப்புங்கள்.
எமது கல்லறைகளை அல்ல.
நமது கனவுகளை.
விளக்கேற்றுங்கள்.
எமது விதைகுழிகளில் அல்ல.
எமது பெயரால் உமது மனதுகளில்.
ஆண்டுக்கொரு மரம் நடுங்கள்
உங்கள் வீட்டின் ஏதொவொரு ஓரத்தில்.
அதிலசையும் ஈரக்காற்றோடு
நாமும் உயிர்தொடுவோம்.

கார்த்திகை மாதத் திருநாளில்
எமை நினைத்துருகி
கண்மழை பொழியுமெம்
மண்மடி உறவுகளே!
எங்கள் யாவருக்குமாய்
நாமெம் இளமைகளை தொலைத்தோம்.
உறவு துறந்த பிரிவு சுமந்தோம்.
வலி தாங்கித் தாங்கி வாழ்ந்தோம்.
தேகமதில் வீரவடுப் பட்டோம்.
பின்னொரு நாளில்
நிறைவேறாத இலட்சியங்களோடு
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றன் பின் ஒன்றாய்
விதைகளாகிப் புதைந்தோம்.

எம் பிரிவின்
வலி சொல்லிச் சொல்லியழும்
ஈரமிகு நெஞ்சுகளே!
எமை தெரியாமலேயே
எமக்காய் கைகூப்பித் தொழும்
வீரமிகு பிஞ்சுகளே!
வாழுங்கள்.
எங்களுக்காய் வாழுங்கள்.
எமது கனவுகளுக்காய் போரிடுங்கள்.
நாம் கேட்கும் நீதிச் சுதந்திரம் பற்றி
தொடர்ந்து சொல்லுங்கள்.
எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை
மறுக்கப்படும் உரிமைகளை
சத்தமாக உரத்துக் கூறுங்கள்.

எமை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு
எங்களில் ஒருவராய்
நீங்கள் இருக்கிறீர்கள் எனும்
நம்பிக்கை கொடுங்கள்.
காலச்சறுக்கலில் சிறைப்பட்டுப் போன
எம் தோழர்களை
அங்கிருந்து வெளியே மீட்டெடுங்கள்.
மீண்டுவந்த காயப்பட்ட மனசுகளுக்கு
கருணை காட்டுங்கள்.
கை தூக்கி உயர்த்தி விடுங்கள்.

உறுப்பிழந்த உறவுகளுக்கு
ஊன்றுகோல்களாகி உதவுங்கள்.
இருள்சுமக்கும் நிலவுகளுக்கு
வாழ வழி காட்டுங்கள்.
யாரும் கேட்காமலேயே
ஒளிதரும் மின்மினியாய்
தேடிப்போய் வெளிச்சம் கொடுங்கள்.
ஆதரவற்றுப் போன தனிமரங்களுக்கு
நிழல் கொடுத்து அரவணையுங்கள்.

ஒற்றுமையாய் இருங்கள்.
எங்களின் பெயரால் ஒற்றுமையாயிருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாய்...
உங்கள் குழந்தைகளுக்கு
எம் தேசவரலாறு சொல்லிக்கொடுங்கள்.
எங்கெங்கு வாழ்ந்தாலும்
எம் தமிழ்மொழியை
கற்பித்துக் கொடுங்கள்.
நம்
தமிழை ...
தாய் நிலத்தை ...
பண்பாட்டை ...
எப்போதும் நேசிக்க கற்றுக் கொடுங்கள்.


நாமென்றும்
உங்களோடே இருப்போம்.
எங்கள் எல்லா சந்ததிகளோடும்.


------ xx -------

தீபிகா.
25.11.2011.
12.05am



Nov 29, 2011

மழை நனைத்த மனசு


பொழிந்து  தள்ளுகிறமழையில்
வழிந்து விழுகின்றன
ஞாபகத்துளிகள்.

தூறல் துளிகளை
முகம் நிமிர்த்தி ஏந்தும் சுகம்.
துரத்திவரும் தூவானங்களிலிருந்து
விலகிநிற்கும் சந்தோசம்.
கூரையின் வழி ஓடி வருகிற
உடையாத வெள்ளித்துளிக் கம்பிகளை
கை நீட்டி குறுக்கறுக்கிற மகிழ்ச்சி.
முதல் விழுகிற மழைத்துளிகளில்
வறுபடுகிற மண்ணின் வாசம்.
தரையில் விழுந்து அடிபட்டுக்கொண்டு
உடைகிற நீர்க்குமிழிகளின் கோலங்கள்.

தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு.
ஒழுகிற இடங்களை ஏந்திககொள்ளும் சட்டிகளில்
மழை பாடும் சங்கீதம்.
எம் கனவுக் கப்பல்களை காவிச்செல்லும்
அலையில்லா வெள்ளம்.
நெய்விளக்குகளுக்கு குடைபிடிக்க வைத்தபடி
எம்மோடு சேர்ந்தழும் கார்த்திகை மழை.

எல்லாம்
இப்போதும் ஈரமாகவே இருக்கிறது.
மழை நனைத்த என் மனசில்.


------xxx -------------

தீபிகா.
25.11.2011
8.13 Pm.
(அடைமழை பொழியும் முன்னிரவு)

Nov 27, 2011


"கனவுகள் நிறைந்த நிலங்கள்



கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற
வீரர்களது வித்துடல் நிலங்களில்
ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அந் நிலங்களை
நாம் கட்டித்தழுவ முடியாதபடி
கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.

விதைநிலங்களிலிருந்து வெடித்தெழும் கனவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாகி
அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

கனவுகள் படர்ந்திருக்கிற
வீரர்களின் பெயர்சுமந்த நடுகல்களுக்குள்ளால்
புகுந்து வருகிற காற்று
எங்களெல்லோரது சுவாசங்களுக்குள்ளும்
உள் நுழைகிறது.

அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த அழிக்கப்பட்ட வெளிநிலத்தின் மீது
எவரும் கட்டிப்போட முடியா நிலவு
தீபஒளி பொழிகிறது.

மறைக்கப்பட நினைக்கிற
வீரர்களின் துயிலிடங்களில்
காற்றின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உறங்கிக்கிடந்த உயிர்விதைகளின் கனவுகள் 
ஊர்களெங்கும் இரகசியமாய் நிறைந்திருக்கிறது.

ஆழிகளை தாண்டிக்கொண்டு 
இன்னுமின்னும் ஆழமாய் வேரூன்றுகின்றன.
அழிக்கப்பட நினைக்கும்
அவர்களின் வரலாறுகள்.

ஒரு கடல்சூழ் நிலத்தில்
கருத்தரித்த கனவுக்குழந்தையின்
பிரசவப் போராட்ட வலியின் ஓலம்
எல்லா மேசைகளிலும் எதிரொலிக்கிறது.

சத்தியச் சாவடைந்தவர்களின்
வரலாற்று நிலங்களெங்கும்
அள்ளிச் செல்லப்பட முடியா
நமது கனவுகள் நிறைந்திருக்கின்றன.

------xxx-----------


தீபிகா.
25.11.2011. 
6.58 Pm.