More than a Blog Aggregator

Nov 15, 2025

ஆடுபிழை

 ஆடுபிழை


எதற்கிந்த மாலைகள்?

நானொரு, 

அப்பாவி வெள்ளாடு.

கடப்புக்குள் நின்று 

வாலாட்டிக் குதியங்குத்துகிற,

சோலியில்லாத சோனையாடு.


நீங்கள் பிழையாய் எண்ணுகிறீர்கள்.

திரும்பவும் சொல்கிறேன்.

எனது கழுத்து மணி 

வெறும் சத்தத்துக்கு தான்.


சும்மா கிடந்த என் நெற்றிக்கு

சூடம் காட்டுகிறீர்கள்.


சந்தியில் நின்றவற்றையெல்லாம்

பிடித்துப் பிடித்துச் சபையேற்றி விட்டு,

கடைசியில்,

ஆடுகள் ஓநாய்களானதென்று

அழுது புலம்புவதே உங்கள் வரலாறு.


நானொரு போதும்,

ஒரு துரும்பும் 

கிள்ளிப் போட்டதேயில்லை.

என்னை,

பப்பாசியிலிருந்து இறக்கி விடுங்கள்.


உங்களின் 

கண்ணுக்கெட்டாத வறுமையும்,

எனக்கு விளங்குகிறது.

அதற்காக,

என்னை வேள்வியில் தள்ளாதீர்கள்.


நான்,

" மே! மே! " என்று கத்துகிற

மெல்லிய வாடல் ஆடு.

வேறெதுவும்,

என் திருவாயால் சுட முடியாது.


------ xxx --------


- தீபிகா-

11.11.2025

12.22 pm.


Tks - photo - M.Rajeev gandhi


#ஆடுபிழை

#தீபிகா 

#கவிதை 

#theepika 

#ஈழம்

எம் பிள்ளைகளின் காற்று

 எம் பிள்ளைகளின் காற்று


நினைவிலூறுகிறது நெருப்பின் தணல்.


காடுகள் பாடும் கீதங்களில்,

பிரிவுத்தூளி அசைகிறது.


புல் மூடிய ஒற்றையடிப் பாதையில்

எவர் குரலையும் காணோம்.


மெளனத்தின் தவத்தில் இருக்கிறது

மரக்கட்டைப்பாலம்.


எந்தச் சிரிப்புக்களையும் கேட்கோம்!


சோகம் காய்ந்த இலைகளை

பரப்பி வைத்திருக்கிறது

தேக்கங்காடு.


யானை கடக்கும் 

நெடுவெயில் பாதையில்,

ஆடுகிற மாலைமயில் எங்கே?


குரங்குகள் தாவும் வீரை மரங்களில் 

கைபடாத பழங்கள் சிவந்திருக்கின்றன.


கூவிக்கூவித் தேடுகிறது குயில்.


ஒரு தலைகளுமற்று வாடியிருக்கிறது குளக்கரைப் பகல்.


கூடுதலாய் மொட்டுக் கட்டுகின்றன 

நித்திய கல்யாணிகள்.


கையசைத்துக் கொண்டு போன

நம் பிள்ளைகளின் காற்று

மெதுவாய் 

என் நெற்றி முட்டுகிறது.


- தீபிகா-

13.11.2025

07.33 pm.


நன்றி -  படம்


#தீபிகா

#ஈழம் 

#theepika 

#மாவீரர்

#எம்_பிள்ளைகளின்_காற்று

#வன்னி

#தமிழ்

இசைமுகம்

 இசைமுகம்


வறுமையின் இசைக்கு

ஒரு 

சோகத்தின் முகம் உண்டு.

மிதந்து மிதந்து

அது

எல்லோரது இதயங்களையும்

தொட்டுப் பார்க்கிறது.

சிலர்,

நின்று திரும்பிப் பார்க்கின்றனர்.

மிகச் சிலரை,

இசை இழுத்துக் கொண்டு வருகிறது.

பலர், 

அதை தாங்க முடியாமல்

விரைந்து கடக்கிறார்கள்.

யாசிக்கிற இசையின் கரங்கள்

காற்றின் முகத்தில்

அவமானத்தின் காயத்தை பரப்புகிறது.

எப்போதாவது சிலர்,

குறைந்த சில்லறைகளால்,

அந்த இசையை அங்கீகரிக்கிறார்கள்.

பசியுடன் அலையும் 

வறுமையின் சுருதியில்

எந்தச் சலனமுமையில்லை.

அது,

ஒரு உயர்ந்த கலையின் உச்சியில்,

அசைவற்ற தியானத்திலிருக்கிறது.


- தீபிகா-

15.11.2025

03.12 am.


Tks - artwork


#தீபிகா 

#இசைமுகம்

#theepika 

#ஈழம் 

#பசி #தியானம்