More than a Blog Aggregator

Apr 5, 2011


மாறியிருக்கிற ஊரும்...
மீதியிருக்கிற உறவும்...


அரைவயிறு உணவுகளோடும்
அடையாள இலக்கங்களோடுமிருந்த
அகதி வாழ்வை முடித்துக்கொண்டு
நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம்.
அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

துப்பாக்கிகளை பிடித்தபடி
மேய்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
சிங்கள இடைஞர்கள்.
ஒட்டிய வயிறுகளோடு சோர்ந்து போயிருக்கிற
மீட்பர்களை தொலைத்த மந்தைகளை.

எங்களின் கடற்கரையில் நின்று
நாங்கள்
பார்த்துக்கொண்டு நிற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம்.
எவரெவரோ வந்து
மீன்பிடித்துப் போகிற காட்சிகளை.

இனிமேல்...

நாற்று நடவும்
ஞாயிற்றுக்கிழமை கூழ் காய்ச்சவும்
காற்றுப்போன சைக்கிள் ரியூப்பை
கழற்றி மாற்றவும்
கடலை வறுக்க வெளியே அடுப்பு மூட்டவும்
அழையா வருத்தாளிகளிடம் அனுமதி பெறவேண்டுமாம்.

பற்றை வளர்ந்திருக்கிற
விளையாட்டு மைதானத்தின் வாசலிலமர்ந்து
ஏதோ பேசிக்கொண்டிருக்கிற
எங்கள் கிராமத்தின்
உதைபந்தாட்ட இளைஞர்களுக்கு அருகே
அழுதுகொண்டிருக்கின்றன
அவர்களின் ஊன்றுகோல்கள்.

நாங்களில்லாத நாட்களின் வெறுமைகளில்
தங்களை அள்ளி நிரப்பிக்கொண்டவர்கள்
இப்போ
எங்கள் மொழியையும் கொலை செய்துகொண்டு
வேலியில்லா முற்றங்களில் வந்து நிற்கிறார்கள்.
மீதி சில்லறைகளையும் கொள்ளையடித்துப்போக.

அவர்களின் பிடிகளிலிருந்து நழுவிய
மீதிக் கால்நடைகள்
எங்கள் வாசம் நுகர்ந்துகொண்டு
மீண்டும் பட்டி திரும்புகின்றன.

சந்தி மதில்களில் சிரித்துக் கொண்டிருந்த
எம் விதைமுகங்களின் மீது
விசிறியிருக்கிற கறுப்புமைகளின் வழி
கசிந்துகொண்டிருக்கின்றன
எங்கள் கனவுகள்.

யுத்தம் தின்றுவிட்டுப் போட்ட மிச்சங்களுக்குள்
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
செத்துப்போன உறவுகளின்
ஞாபகங்களுக்காய் பத்திரப்படுத்த
அவர்கள் பாவித்த
ஏதேனுமொன்றின் எச்சங்களையேனும்.

மாறியிருக்கிற எம் ஊரில்
மீதியிருக்கிற உறவுகளின்
பாதியிருக்கிற மனசையேனும்
நீதியிருக்கிற நாடுகளும்
நாதியிருக்கிற மனிதர்களும்
காப்பாற்றித் தர மாட்டீர்களா?

*** முற்றும் ***


26.07.2010
03.43 pm

Feb 21, 2011

 விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..




என் அப்பாவை  ஒளி(ழி)த்த குற்றத்துக்காக
அவர்களை நோக்கி வருகிற
தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்
நாக்குத் தொங்கச் சாகப்போகிற
தீர்ப்புக்களிடமிருந்து
தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக
தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு
உன் அப்பா
நேற்று உண்ணாவிரதமிருந்தார்.


கூடவே...நீயுமுன்
அப்பாவுக்காக சாப்பிடாமல்
அடம்பிடித்துக் கிடந்தாயாம்.


தோழியே!
மனதை தேற்றிக்கொள்.
ஒன்றிரென்டு நாள் பட்டினி கிடந்தாவது
உயிரோடிருக்கிற உன் அப்பாவை
வீடு கொண்டுவந்து சேர்க்க
உன்னால் முடிந்திருக்கிறது.


இங்கே...காணாமல் போகடிக்கப்பட்ட
என் அப்பாவைதேடிக்கொண்டேயல்லவா
நான் தினமும் உணவுக்கு வழியற்று
பட்டினியிருக்கிறேன்.


நேற்று
நானும்..தம்பியுமாய் சேர்ந்து
கருகிக்கிடக்கும் எம் வீட்டின் சாம்பலுக்குள்
கடைசிவரை தேடியும் கிடைக்கவேயில்லை.
உன்வயதே இருக்கும் எங்கள் அப்பாவின்
ஒரேயொரு புகைப்படமாவது.


அம்மாவின் பொட்டில்லாத நெற்றியையும்
சிரிப்பில்லாத உதட்டையும்
பார்க்க பார்க்க அழுகை வருகிறது.


உன் அப்பாவுக்கு
தவழ்ந்துவந்து யூஸ் கொடுக்கிற
உனது ஜனாதிபதி
எங்களுக்கு குளிப்பதற்கே நீரளந்து தருகிற
ஒரே நாட்டுக்குள் தான்
நானும் நீயும் இருக்கிறோம் தோழி.


சித்தார்த்தனின் மாளிகைக்குள்ளிருந்து
உனது கண்களால்
நான் திருவோடு ஏந்துகிற காட்சியை
நீ கண்டுகொள்ள முடியாது தான்.
எனினும்அப்பா இல்லாத வீட்டின்
வலிகளிலொரு துளியையேனும்
நீ அனுபவித்திருப்பதால் கேட்கிறேன்.
எனது ஏக்கம் உனக்கு புரிகிறதா?


சாரத்தை ஊஞ்சலாக்கிக் கொண்டு
நான் ஒளித்திருக்கிற என் அப்பாவின் மடியும்..
குலுங்கிக் குலுங்கி சிரிக்க
வானம் தூக்கியெறிந்து பிடிக்கும்
அப்பாவின் கரங்களும்..
உனக்கு கிடைத்தது போல
எனக்கும்
ஒருநாள் திரும்பக் கிடைத்துவிடாதா?




பாடசாலைகளுக்கு
சிறுவர்களை கைப்பிடித்து வரும்
உரோமமுள்ள கரங்களில்... ...
திருவிழாக்களில்
குழந்தைகளை தூக்கிவைத்திருக்கும்
புடைத்த தோள்மூட்டுக்களில்... ...
முன்னால் சிறு மொட்டை விழுந்திருக்கும்
தகப்பன்மாரின் தலைகளில்... ....
என் அப்பா வைத்திருந்த
அதே கறுப்புநிற மோட்டார்சைக்கிளில்
வீதியில் போய்வருவோர் முகங்களில்... ...
கிடைத்துவிடுமென்ற எதிர்பார்ப்புடன்
கண்கள் களைத்துப் போகும்வரை
நானின்னும் தேடிக்கொண்டே தானிருக்கிறேன்.


இப்போ
என் முதலெழுத்தோடு மட்டுமே மிஞ்சியிருக்கிற
என் அப்பாவை.


*** முற்றும் ***

தீபிகா
18.07.2010
09.27 pm
நட்சத்திரங்களற்ற வானம்





மேகங்களிடம்
நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு
பொட்டில்லா காதலி முகமாய்
வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது. 


பக்கத்துப் பிறைச்சந்திரனும்
மேகங்களோடு கூட்டுச் சேர்ந்து
நட்சத்திரங்களை சுருட்டியெடுத்த போதும் கூட
இலைகளோடு போட்டியிட்டுக் கொண்டு
தன் இருக்கைகளை சரிபார்த்தபடியிருந்த

உதய சூரியன்
இப்போ வானம்பாடிகளைத் தூதனுப்ப கேட்கிறது.


இடியும் மின்னலும்
ஒரு கடற்கரை மீதான வானத்தோடு
தம்முரசல்களை முடித்துக் கொண்டபோது
பட்டம் விட்ட காற்சட்டைச் சிறுவர்கள்
கீழே கருகிக் கிடந்தார்கள்.

புறாக்களும் குருவிகளுமாக பறந்த

வானத்திலிருந்து வல்லூறுகள்
எதனையும் விட்டுவைக்கவில்லை.


வானங்களை உடைத்துக் கொண்டு
எங்கும் இரத்தமழை பெய்தபோது
தாவரங்கள் தண்ணீரின்றி மாண்டன.
தேவதைகள் காட்சிதரா வானத்தைப் பார்த்தபடி
எல்லோரும் கைகூப்பிச் செத்தனர்.


மனிதச் சுனாமிகள் மச்சம் விழுங்கையில்
காதுகளுக்குள் சங்கீதங்களை கொழுவிக்கொண்டு
கறுப்பு முக்காடுகளை போர்த்தியபடி
பச்சை மாமிசங்களின் தோலுரிகிற காட்சிகளை
பார்த்துக் கொண்டிருந்த
குள்ள மனிதர்கள்
மஞ்சள் கண்களுடையவர்கள்
சுருள் தலைமுடியுடையோர்
சப்பட்டை மூக்குக்காரர்
வெள்ளைத் தோலார்.


எல்லோரும்.... இப்போ…
ஓட்டைகளோடிருக்கும் வானத்தின் துளைகளில்

பூக்கன்றுகளை நட்டுத் தருவதாகவும்..
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு
பொம்மை தருவதாகவும்..
கணவனில்லாத சகோதரிகளுக்கு
வானவில் நிறத்தில் சேலை தருவதாகவும்..
கத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.

நட்சத்திரங்களி்ன் மீட்சி பற்றி
கேட்கிற வாய்களுக்குள்
வந்தவர்கள்
இனிப்புக்களை அள்ளி திணிக்கிறார்கள்.
வாய்த்தவர்களோ துப்பாக்கிகளை திணிக்கிறார்கள்.

இப்போ
அசிங்கமாய் தெரிகிற நட்சத்திரங்களற்ற சூரியன்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு
சரிந்துகிடந்து எழுதிக்கொண்டேயிருக்கிறது

கடிதங்களும்-கவிதைகளும்.

வாழைக்குருத்துக்குள் விழுந்த விடிவெள்ளி
மீண்டும் வைரமாகுமென
பாட்டி சொல்லிக்கொண்டிருக்கிறாள்
வந்தவர்களின் காதுகளுக்குமாக சேர்த்து.

இருட்டாகவே இருக்கிறது பகலும்.
நட்சத்திரங்களற்ற வானத்தில்.

 *** முற்றும் ***

27.07.2010

12.13 am