More than a Blog Aggregator

May 30, 2013

எழுத்தாளர்களே! வேண்டாம்.



எழுத்தாளர்களே! வேண்டாம்.





எழுத்தாளர்களே!

வேண்டாம்.
உங்களின் ஏதாவொரு வரியில்
கட்டுண்டு போனவர்கள் நாங்கள்.
உங்களை நம் கற்பனைகளின்
உயரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கீழே விழுத்தி விட சம்மதமில்லை.

வேண்டாம்.
உங்களைப் பற்றி
நாம் எதுவுமே அறிய வேண்டாம்.
உங்களின் எழுத்துக்களில் அழகு கண்டு
காதல் கொண்டவர்கள் நாங்கள்.
அந்த தீராக் காதலில்
நாங்கள் தோற்றுப் போக விருப்பமில்லை.

வேண்டாம்.
வாழ்வின் பாரத்தை
வார்த்தைகளின் ஈரத்தால் நிரப்பிக் கொள்ள
புத்தகங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.
சமூகம் கிழித்த வாழ்வின் காயங்களுக்கு
களிம்பு தடவுவதற்காக வாசிப்பவர்கள் நாங்கள்.
மீண்டும்
புண்களால் வலியுற சம்மதமில்லை எங்களுக்கு.

வேண்டாம்.
தெரிந்த அரசியல் வாதிகளாலும்...
தெரிந்த வியாபாரிகளாலுமே..
நாங்கள் வெம்பிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் விம்மியழ முடியவில்லை மனசுக்கு.

வேண்டாம்.
உங்கள் எழுத்து முகங்களில்
மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்.
அந்த மரியாதைக் கண்ணாடிகளில்
உங்கள் சுயமுகங்களின்
விம்பங்கள் விழுந்து கீறல் விழவேண்டாம்.

வேண்டாம்.
எழுத்துக்கும் உங்களுக்கும் இடையில்
எந்த இடைவெளிகளுமில்லா மனிதர்களாய்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என
நாம் ஏதோ நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அந்த நம்பிக்கையை சாகடித்து விடாதீர்கள்.

வேண்டாம்.
ஆத்ம திருப்திக்காக புத்தகங்களை
கையிலெடுத்தவர்கள் நாங்கள்.
ஈரமுள்ள மனிதர்களை
எழுத்துக்களுக்குள் தேடி வந்தவர்கள் நாங்கள்.
எங்களை ஏமாற்றி விடாதீர்கள்.

வேண்டாம்.
உங்களின் முகங்களை
நாங்கள் ஒருபோதும் பார்க்கவே வேண்டாம்.
உங்களின் வாழ்க்கை பற்றி
நாங்கள் ஒருபோதும் அறியவே வேண்டாம்.
உங்களின் வியாபாரங்கள் பற்றி
நாங்கள் ஒருபோதும் தெரியவே வேண்டாம்.
உங்களின் செய்கைகைள் பற்றி
நாங்கள் ஒருபோதும் கேட்கவே வேண்டாம்.

 
----xxx-----


தீபிகா
29-05-2013
05.17 P.m

May 29, 2013

துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது



துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது


மெனனப் பின்னிரவில்
அனுமதியின்றி யன்னல் புகுந்து விழும்
அறைச்சுவரின் நிலவொளியில்
விட்டுவிட்டு நடனமாடுகின்றன
கறுப்புத் தென்னங் கீற்றுக்கள்.


தூரத்துத் தெருவொன்றிலிருந்து
பயங்கரமாய் வந்து சேர்கிறது
நாய்களின் நள்ளிரவு ஆலாபனை.

முழுதாய் திருகி முடிக்காத
தண்ணீர்க் குழாயின் கண்ணீர்த் துளியை
சத்தமாய் ஏந்திக் கொள்கிறது வெறும்வாளி.

கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்னுமென்னிடம் பிடிபடாதிருக்கின்ற
கரப்பான் பூச்சியொன்று
கைகளை சுரண்டிவிட்டு ஓடுகிறது.

கூட்டை விட்டு வெளிக் கிளம்பி
என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாய்
கிட்டக் கிட்டக் கேட்கிறது
விநாடிக் கம்பியின் கர்ச்சிப்பு.

வெட்கம் மறந்து கதறுகிற
இரவுப் பெண்பூனை
பாலுக்கு வீரிட்டழுகிற ஒரு பஞ்சுக் குழந்தையை
என் கைகளில் தந்து விட்டு ஒளிகிறது.

மூலைச் சுவரோடிருக்கிற தென்னைமரம்
தன் வியர்வை அரிச்சலை
கூரை விளிம்பில் சுருதி பிசகாமல்
தேய்த்துக் கொண்டே இருக்கிறது.

சுவர் மேடையில் நடந்த
பல்லிகளுக்கான நள்ளிரவுக் குத்துச் சண்டையில்
எல்லைக் கோட்டைத் தாண்டி
என்னருகே “தொப்” என்ற சத்தத்துடன்
விழுந்த கிடக்கிறது ஒரு வீரப்பல்லி.

சுருதி விலகாத தாளக்கட்டுப்பாடு
பாடிக் கொண்டே போகிறது
நெடுந்தூரப் புகைவண்டி.

வானக் கிளையிலிருந்து
நட்சத்திரப் பூவொன்று
வேரை நோக்கி சிரித்துக்கொண்டு விழுகிறது.

பாம்பு ஊர்வதான பிரமையில்
போர்வையை வெடுக்கென உதறிவிட்டு
படபடக்கிறது கால்.

வலப்பக்கம் வைத்துவிட்டுப் படுத்த செல்பேசியை
இடப்பக்க படுக்கையெங்கும் தடவுகின்றன
தூக்கக் கைகள்.

அமைதியாய் ஊற்றுகிற ஒருமிடறு தண்ணீர்
தொண்டைக் குழியை
பேரிரைச்சலோடு கடப்பதாய்
செவிகள் அலறுகின்றன.

கொஞ்சம் பெய்யலாம் போல இருக்கிற
என் நீர்மழையையும்
விடாது அடக்கி வைத்திருக்கிறது
இரவுப் பயம்.


---xxx ---

தீபிகா.
25-05-2013
12.28 P.m







May 28, 2013

எப்படி இருக்கிறீர்கள்?

எப்படி இருக்கிறீர்கள்?


புகழ் எனப்படுவது கூட ஒரு வகை போதை தான். நான் கொண்டாடப்பட வேண்டும் என்றும்,நான் மதிக்கப்பட வேண்டும் என்றும் எண்ணும் மன இயல்பு ஒரு வித முற்றிய நோய்க் கூறே. மரியாதை என்பதும் அன்பைப் போலவே கேட்டு பெற முடியாத உணர்வு. நம் ஒழுக்கமும், ஒழுங்குமே அதை பெற்றுத் தரும். நாம் புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கின்றோமா? என்று சுய பரிசீலனை செய்வதற்கு முன்னர் நல்ல பண்பாளர்களாக இருக்கின்றோமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் எம்மைப் போன்று இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது சுத்த மடைமைத் தனம்.
பதில் சொல்லுதல் என்பது கூட ஒரு வகை கலையே. ஒரு குழந்தைக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்பதும், ஒரு வெறிகாரனின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதும் ஒரு பக்குவப்பட்ட மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் சமூகம் என்பது படித்த மானிடர்களால் தான் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குருட்டுத்தனம் மிக்க தவறான சிந்தனாவாதம். வாசிப்புக் கலை ஒரு மனிதனின் அறிவை உயர்த்தும் என்பது எவ்வளவு உண்மையோ அதை விட ஆயிரம் உண்மையானது நேசிப்புக் கலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பது.

தம்மை அறிவாளிகள் என்று சொல்லி கொள்கிறவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டியது ஒரு படிக்காத பாமரனை எப்படி கையாளுவது என்பதையே. ஒரு அணு விஞ்ஞானிக்கு கூட படிக்காதவனிடமிருந்து கேட்டுக் கற்றுக் கொள்ள எத்தனையோ அனுபவக் குறிப்புக்கள் இருக்கக் கூடும். சமூகத்தின் பொறுப்பு மிக்க பதவிகளில் தாம் இருப்பதாக உணர்கிற புத்திசாலி மனிதர்களுக்குரிய முதற் தகுதியே ஒரு சமூகத்தில் அங்கம் வகிக்கிற எல்லா வகையான மனிதக் கூறுகளையும் வெற்றிகரமாக கையாளத் தெரிந்திருத்தலே.

தான் வாழும் சமூகத்தை பக்குவமாக வளர்த்தடுத்துச் செல்லத்
தெரியாத எந்தப் பெரிய மேதையும் அவருடைய
ஆற்றல்களாலும், விருதுகளாலும், பதவிகளாலும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனை உலகத் தரமான இலக்கியங்களை அவர் கரைத்துக் குடித்திருந்தாலும் தன் சமூகத்தின் மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவரால்அந்தச் சமூகத்திற்கு எந்தவித பலனும் கிடைக்கப் 
போவதேயில்லை.

ஒரு உண்மையான அறிவாளி என்பவனுக்கும், தன்னை தன் சமூகத்தின் பிரதிநிதி என்பவனுக்கும், உண்மையான பெருமை என்பது "தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றிச் செல்லுதல்" என்பதுவே. அந்த நற்செயலை புரிகிற பெரு மகனை அவன் வாழும் சமூகம் முதல் அகிலமுமே போற்றிப் புகழும்.

அதற்கு அடிப்படைத் தேவை அறிவு அல்ல.
பேரன்பும், நற்பண்பும், சகிப்புத் தன்மையுமே.
---xxx ----


தீபிகா
27-05-2013
10.28 P.m