More than a Blog Aggregator
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.