More than a Blog Aggregator
Showing posts with label தீபிகா. Show all posts
Showing posts with label தீபிகா. Show all posts

Jun 16, 2012

அப்பா

அப்பா




ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. 
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

                                                        -Wilhelm Busch-



அப்பா...

ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான்.ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. 

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும்,அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ..அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?




மனைவி,பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலிசுமந்து வலிசுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம்,துணிச்சல்,விடாமுயற்சி,நம்பிக்கை,உழைப்பு.....இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதை”

“ஒண்டுக்கும் யோசிக்காதை”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதை”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள் என்பவர்கள்


பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

பிள்ளைகளின் நெம்புகோல்கள்

பிள்ளைகளின் அச்சாணிகள்

பிள்ளைகளின் சூரியன்கள்

பிள்ளைகளின் திசைகாட்டிகள்

பிள்ளைகளின் ஆசிரியர்கள்

பிள்ளைகளின் நம்பிக்கைகள்.

.... ..... ..... ..... ..... ..... .... .... ....



(சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி எழுதிய உரைநடை)



----xxx----xxx----





தீபிகா

11-06-2012

9.18 A.m



May 12, 2012

“அம்மா என்றால் சும்மா இல்லேடா”
(உரைநடை)
                                 



அன்பு,
ஆதரவு,
அர்ப்பணிப்பு,
பொறுமை,
தியாகம்,
விட்டுக்கொடுப்பு,
கரிசனை,
காதல்,

ஆகிய அத்தனை பரிசுத்தமான உண்மை உணர்வுகளையும்
காலநேரம் பாராது அள்ளிக் கொடுக்கின்ற அட்சயசுரபி,
"அன்னை" என்கின்ற
ஒப்புவமையற்ற 

ஒரேயொரு உறவான தாய்மை மாத்திரமே.

நாம்,
மனித விழிகளுக்குள் புலப்படாத 

எம்மிலும் ஆற்றல் படைத்த
பிரபஞ்சத்தின் மாபெரும் மகாசக்தியை
கடவுள் என்று வணங்குகின்றோம்.
அந்த மகா சக்தி எமக்கெல்லாம் அளித்திருக்கிற
மாபெரும் சக்தி வடிவானவள் தாய்.

நாம் அகக்கண்ணால் மட்டுமே தரிசிக்கிற ஆண்டவன்
உயிர்கொடுத்து, உருவளித்து ஒவ்வொருவருக்கும் உறவென்றாக்கி
நம் பார்வைகளுக்கு
தரிசிக்க கொடுத்திருக்கிற உத்தமியே அம்மா.

கிட்ட இருக்கிற போது , நம் கைகளில் இருக்கிற போது,
அறிந்து கொள்ளத் தவறுகிற அல்லது 

அலட்சியமாய் இருந்துவிடுகிற
அம்மா என்கிற அழகு தேவதையினுடைய
அன்பின் ஆழத்தையும், ஈரத்தையும்

பறிகொடுத்து விட்டபிறகு தான்
மனம் பதைபதைக்க நினைத்து நினைத்து உருகுகிறோம். 

இருக்கும்போது கொடுக்கத் தவறிய ஈரமுள்ள அன்பை 
இழந்த பிற்பாடு ஈரக்கண்ணீராய் 
சொரிந்து தள்ளுகின்றோம்.

அன்னை என்கிற மகரஜோதி
அருகிருந்து ஆண்டாண்டு காலமாய் ஒளி தருகிற போது
அதன் வெளிச்சத்தின் வேர்களை மதிக்கத் தவறுகிற,
மரியாதை செய்யத் தவறுகிற நம் பேதை மனசுகள்
அணைந்த பிறகு அங்கலாய்க்கிறது.
பிரிவுக் காற்று அள்ளிக் கொண்டு 

பிரியாவிடை சென்ற பிறகு பேதலிக்கிறது.

எனவே,
உறவு விருட்சத்தின் நதிமூலமாகி வெளித்தெரியாமல்
தன் அத்தனை கிளைகளையும் தாங்கி நிற்கிற
அம்மா என்கிற ஆணிவேருக்கு 

ஈரமிகு அன்பை ஊற்றுவோம்.
இருக்கிற போது இதயத்துக்கு மலர் தூவுவோம்.
விழித்திருக்கிற போது விழுதுகள் 

ஊஞ்சலாட்டுகிற காட்சியை பரிசாய் கொடுப்போம்.

ஒரு தாயின் இதயம் பிள்ளைகளுக்காய் 
எத்தனை முறை துடித்திருக்கும்? 
எத்தனை நாள் பசிகிடந்திருக்கும் அவள் வயிறு?
எத்தனை மணி நேரம் காத்திருந்திருக்கும் அவள் விழிகள்?
எத்தனை தூரங்களை வலியோடு கடந்து சென்றிருக்கும் 

அவள் பாதங்கள்? 
எத்தனை விருப்பங்களை விட்டுக்கொடுத்திருக்கும் 
அவள் மனசு?
எத்தனை காயங்களை..
எத்தனை சொற்களை...
எத்தனை வலிகளை....
எத்தனை பிரச்சனைகளை...
எத்தனை எத்தனை சோதனைகளை
தினமும் எதிர்கொண்டிருக்கும் அவள் வாழ்க்கை.

ஒரு மனிதன் வளர்கிற போது 
புரிந்து கொள்ள முடியாதிருக்கிற 
அம்மா என்கிற தன்னலமற்ற தியாகத்தின் உச்சத்தை,
அவன் வளர்க்கிற போது, 

தன் குழந்தைகளை வளர்க்கிற போது
நிச்சயமாக உணர்ந்து கொள்வான்.

காதலியின் பார்வையைக் காட்டிலும் 
அம்மாவின் பார்வையில் இருக்கிற அன்பின் ஈரத்தை 
நாம் மறுக்க முடியாது.
ஒரு தாயின் புன்னகையில் எல்லா காயங்களும் 

ஆறிவிடுமெனின் அது பொய்யே இல்லை.

அம்மாவின் தாய் மடியில் படுத்து தூங்குகிற 
அலாதியான சுகம், உலகின் எந்த சொகுசு 
பஞ்சு மெத்தைகளிலும் கிடைத்துவிடாது என்பது 
அனுபவித்த மனசுகளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் தாயின் கையால் உருட்டித் தருகிற உணவின் ருசி 
பிள்ளைக்கு எந்த உணவகத்திலும் கிட்டாத 
திகட்டும் உணவில்லையா?
அந்த உருளையில் தாயின் உயிர் வாசத்தை 

நாங்கள் நுகரமுடியுமில்லையா?
என்றும் மறக்க முடியாத அந்த நினைவின் வாசத்தை 

நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் 
ஏங்கி ஏங்கி கரைவது என்பது
என்றும் தொடரும் உறவுக்கதை இல்லையா?


"அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம் 
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.
தாய் என்கிற மூலத்தை தழுவி தாய்மொழியும், 

தாய்நிலமும் தங்களை தரமுயர்த்தி நிற்கின்றன. 
உலகின் எந்த கோடியில் ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவன் தன்
தாயையும்,
தாய்மொழியையும்,
தாய்நிலத்தையும்
மறக்க முடியாது. மறந்திருக்கவும் கூடாது.

தினம் குறித்து கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல அன்னையர் தினம். 
அது தினந்தினமும் கொண்டாடப்பட வேண்டிய 
தாய்த் திருநாள்.

ஏனைய எல்லா தினங்களையும் போல 
வெறும் காகித மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும்
இந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி விட முடியாது. 

அம்மா என்கிற பாசமிகு உயிரின் ஆழந்தொட 
எந்த மொழியின் வார்த்தைகளாலும் முடியாது.

பத்து மாதம் தாங்கிய கருவறைகளின் மனசுகளை 
காயமின்றி மயிலிறகு வார்த்தைகளால் வருடுவோம்.
உதிரப் பூக்களை தாங்கிய தியாகக் கரங்களை
இறுகப் பற்றிக் கொள்வோம்.

வயிற்றிலும், இடுப்பிலுமாய் 
எம் பாரம் சுமந்த உடல்களின் பழுத்தாங்கி நடந்து
இப்போ வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களை 

பிடித்து விடுவோம்.
தோல்விகளிலும், விரக்திகளிலும் 

துவண்டு வந்த பொழுதுகளில்
தம் ஒராயிரம் முத்தங்களால் ஆறுதல் கொடுத்து
எம்மை நிமி்ர்ந்தெழ வைத்த அம்மாக்களின் வற்றாத 

பாச முத்தங்களுக்கு பதில் முத்தங்கள் பரிமாறுவோம்.

நாம் தலை சாய்த்த முதல் தோள் 
நாம் முகம் புதைத்தழுத முதல் மடி
எம் கண்ணீர் துடைத்த முதல் கைவிரல்
எம்மை முத்தமிட்ட முதல் இதழ்
நாம் பார்த்துப் புன்னகைத்த முதல் முகம்
எல்லாம்.....எல்லாம்.....
அம்மா என்கிற ஒற்றை ஜீவனுக்கே சொந்தமானது.

முதன்முதலில் கிடைத்த அந்த முழுசுகங்களின் 
சுகந்தம்,
நிறைவு,
திருப்தி,
மகிழ்ச்சி
இவையெதுவும் ஒரு மனிதனுக்கு அதற்கு பிறகு 

அதே சுகங்களுடன் அன்னையை தவிர 
வேறு எவராலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

தெய்வத் திருமகளான தாய், தன் குழந்தைகளுக்கு 
அள்ளிக் கொடுக்கிற அமுதசுரபிகளல்லவா அவை. 

பலநேரங்களில் நாம் வெளிப்படுத்திய விவரமறியாத எங்கள் 
கோபங்களை,
புறக்கணிப்புக்களை,
சுடுசொற்களை,
அலட்சியங்களை,
அவமானப்படுத்தல்களை எல்லாம்
நெஞ்சு நிறைந்த பாசத்தோடும், 

இமயமளவு பொறுமையோடும் தாங்கிக் கொண்டு
திரும்பத் திரும்ப எங்களை எப்போதும்
தாங்கத் தயாராயிருக்கிற தாய்மையின் மாண்பை
வாழ்த்துவதற்கும், வணங்குவதற்கும்,
நினைந்து நினைந்து மனமுருகி 

எம் மனச்சாட்சிகளின் ஆழத்திடம் 
மன்னிப்பு கோருவதற்கும்
ஒற்றை நாள் போதுமானதாகவே இருக்காது.

தன்னலமற்ற அம்மாக்களின் தியாகப் பெருவாழ்வுக்கு 
என்றும் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருப்போம்.
இருக்கும்வரை அவர்களின் இதயங்களை 

மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வோம்.
புனிதமான தாய்மாரின் மனசுகள்

புண்படும்படியாக நடவாதிருப்போம்.

வைத்திருப்பவர்கள் 
தங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டும்
இழந்துவிட்டவர்கள்
தங்கள் இதயங்களில் தாங்கி்க் கொண்டும்
அவர்களை சுமந்து சென்று கொண்டேயிருப்போம்.

ஏனெனில் 
அம்மாக்களின் இருப்பென்பது 
எங்கள் உயிருக்கான வீரியம்.
எம் பார்வைகளுக்கான அகல்விளக்கு.
எம் பாதச்சுவடுகளுக்கான திசைகாட்டி. 






               (அம்மா...அம்மா..எந்தன் ஆருயிரே..)



...xxx....xxx.....




முற்றும்.



தீபிகா.
02-05-2012
11.16 P.m
(அன்னையர் தினத்துக்காக எழுதிய உரைநடை)







  

Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.