More than a Blog Aggregator
Showing posts with label கவிதை. தமிழ். தீபிகா. ஈழம்.. Show all posts
Showing posts with label கவிதை. தமிழ். தீபிகா. ஈழம்.. Show all posts

Apr 11, 2012


நானொரு உதைபந்தாட்ட வீரன்



நீண்ட நாட்களுக்கு பிறகு
விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில்
மிச்சமிருக்கும் இளைஞர்கள்
பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.



அவர்களை நோக்கி எறிகிற
என் உற்சாகச் சொற்களை
பொறுக்கியெடுக்க முடியாமல்
இளைஞர்களின் கவனங்கள்
பந்தைச் சுற்றி ஓடித் திரிகின்றன.

எவரும் பறித்தெடுக்க முடியாதபடி
நான்
கால்களால் முத்தமிட்டுக்கொண்டே
பந்தை நீண்டதூரம் கூட்டிச்செல்வேனென்பதும் ,
மையத்திலிருந்து கொண்டே
மூன்று முறை இலக்கடித்திருக்கிறேனென்பதும் ,
எங்கள் கிராமத்துக்கே
நன்கு ஞாபகமிருக்கிறது.

இப்போதும்
வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
வெற்றிக் கேடயங்களை
நான் வாங்கி உயர்திய போது ,
இந்த இளைஞர்களது
கைகளிலிருந்தும் தான்
உற்சாக ஒலியெழுந்து அடங்கியது.

நான் சேர்த்து வைத்திருக்கிற
பரிசளிப்பு புகைப்படங்களின் மூலையில்
பாதி வெட்டுண்ட
இவர்களின் முகங்களும் சிரித்தபடியிருக்கின்றன.

இருந்தாலும்
என்னை சேர்த்து விளையாட முடியாதென
இவர்கள் சொல்லி விட்டார்கள்.
இனிமேல்.

அதனாலென்ன... ...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு .

என்னிடம் ஒரு சோடி
பொய்க்காலும்…
ஊன்று கோலும்…
இருக்கும் வரை.



---- xxx ----


தீபிகா.
25.02.2012
08.04 P.m

Mar 12, 2012

  உண்மை அறியும் பொய்கள்



சமாதானம் தருவிக்கப்பட்டதாய்
சொல்லப்படுகிற எனது நிலத்தில்
வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற
விளம்பர மரங்களின் நிழலில்
நாய்களுடன் சேர்ந்து
வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்
படுத்துக் கிடக்கின்றன.


திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு 
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.


சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் 
மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை
பார்க்கும் ஆவல் நிறைந்த
அதே கண்கள்
குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி
கும்மாளமிட்டபடி ஊரெங்கும்
மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.

மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன.


இனிமேல் தேன் சேகரிக்க 
அனுமதிக்கப்படாத அவைகள்
வயிறு நிறைப்பதற்காக
கைவிடப்பட்ட வெளிகளில்
அங்கும் இங்கும் அலைகின்றன.

நட்சத்திரங்களற்ற வானத்தில்
குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்
அவர்களின் தந்தைமார் பற்றி
எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்
நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்
அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை
படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.

பகலில் சமாதானம் விற்கப்படும்
எங்கள் நகரத் தெருக்களில்
இரவில் ,
நாய்கள் அமளியாய் குரைக்கையில்
சாளரங்களை சாத்திக்கொண்டு
எல்லா இதயங்களும்
எப்போதும் போலவே படபடக்கின்றன.

துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற
வெளித்தெரியாத வட்டங்களுக்குள்
குடியிருக்கிற எங்கள் சனங்கள்
இப்போ
தாம் எந்தப் பயங்களுமற்று
மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்
வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.


--- xxx ---



தீபிகா
23.02.2012
11.13 A.m