More than a Blog Aggregator

Sep 10, 2023

யுனிக்கோர்ண்

சிறுகதை       

                                              

இன்றோடு மதுராவுக்குப் எட்டு வயதாகிறது. யுனிக்கோண்,யுனிக்கோண் என்று எப்போதும் கையைத் தட்டிச் சிரிக்கிறவள் அவள். இந்த முறை அவளுக்கு, ஒரு யுனிக்கோண் கேக் தான் எப்பிடியாவது வெட்ட வேண்டுமென்று, அவளின் தாய் சொல்லி விட்டதால், ஓடர் கொடுத்த கேக்கை எடுக்க நிற்கிறேன். எப்போது ரீவியில் யுனிக்கோணைக் கண்டாலும், சத்தத்தைக் கேட்டு ஓடி வருவாள். யுனிக்கோண், யுனிக்கோண் என்று கைதட்டிச் சிரித்துக் கொண்டு, எங்களையும் யுனிக்கோண் என்று சொல்லச் சொல்வாள். கலர் அடிக்கிறதென்றாலும், யுனிக்கோண் தான். நானும், எத்தினையோ தரம், வேறு மரங்கள், பூக்கள், றெயின்போ, பப்பாச்சோ என்று படங்களை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தும், அவளின் யுனிக்கோண் ஆசை இன்னும் தீர்ந்த பாடாயில்லை.

உண்மையில், எங்களுக்கும் அவளொரு சிறகு விரிக்கிற றோஸ் நிற யுனிக்கோண் தான். அழகான பல் வரிசை. தாயைப் போலவே அகன்ற விரிந்த கண்கள். அழகான சுருள் தலை மயிர். நீண்ட கைவிரல்கள், தடித்த புருவம் என்று நமக்குக் கிடைத்த அழகான தேவதை மது. கலியாணம் செய்து, ஐந்து வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து, பிறகு சீரடி சாய்பாபாவுக்கு, மனைவியும், நானுமாய் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து பிறந்த பெண்குழந்தை தான் மதுரா. மூன்று வயது வரைக்கும், எங்கள் மூவரிடமும் பொங்கி வழிந்த உற்சாகமும், ஆனந்தமும் அதன் பிறகு, மெல்ல மெல்ல வற்றத் தொடங்கியது. நாங்கள் அவளின் முதல் வார்த்தைக்காகத் தவமிருந்தோம். மனைவிஅம்மாதான் சொல்லுமென்றாள். நான் இல்லை, ”அப்பாதான் சொல்லுவாள் என்றேன்.

ஆனால், அவள் இன்று வரைக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லாமலே இருக்கிறாள் என்பது தான், எங்கள் கண்ணீரின் மொழி. நாங்களும், இறைஞ்சாத தெய்வங்கள் இல்லை. மனைவி தூங்காத இரவுகளும், அழுது தீர்த்த கண்ணீர்களும் ஏராளம் ஏராளம். நான், அவளுக்கு முன் ஒருபோதும், என்னை உடைந்து போய்க் காட்டிக் கொள்வதில்லை. எப்போதும், தைரியம் சொல்லிக் கொண்டே இருப்பேன். மனைவி முன்போலவே இல்லை. தலைமயிரெல்லாம் கொட்டி, கண்ணெல்லாம் கருவளையம் போட்டு, ஆள் வலு கேவலமாகிப் போய் விட்டாள். என்னத்தை, எப்படிச் சமாதானம் சொன்னாலும், எந்த வைபவங்களுக்கும், நல்ல நகையுடைகளை உடுத்த அவளுக்கு மனம் வருவதில்லை. ஆனால், மதுவை மட்டும், ஒரு குறையும் தெரியாதவளாக, குளிப்பாட்டி, உடுத்தி, எங்கும் கூட்டிச் செல்வாள். அவளைச் சந்தோசப்படுத்துவதே தனது முழுநேர வேலை என்பது போல இருந்து விட்டாள்.

நானும், எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டேன். அவள், வேலைக்குப் போவதே இல்லை. எப்போ பார்த்தாலும், மது..மதுஎன்று மதுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள். எங்களுக்குப் பிறகும், அவளுக்கு வாழ்விருக்கிறது. வாழ்வாள். இந்த நாடு அவளை வாழ வைக்கும். ஏதோ ஒரு நாளில் திடீரென்று பேசுவாள். ஐசாக் நியூட்டன் கூட, இப்பிடியொரு குழந்தையாக இருந்து வந்தவன் தான் என்று என்னால் முடிந்த மட்டும் வகுப்பெடுப்பேன். எல்லாவற்றிற்கும்ம்கொட்டுவாளே தவிர, வேலைக்குப் போக மறுத்தே விட்டாள்.

எல்லோரும், மூன்று வயதில் கதைப்பாள்.நான்கு வயதில் கதைப்பாள். ஐந்து வயதில் கூடக் கதைத்தவர்கள் உண்டு, என்று அனுபவங்களைப் பகிர்ந்தார்கள் தான். இங்குள்ள வைத்தியர்களும் கூட, எங்களைத் தேற்றவோ, என்னவோ, நம்பிக்கையை விடாதீர்கள். பயிற்சி கொடுங்கள். முயற்சி எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும், செய்யாத முயற்சிகள் இல்லை. ஆள் மாறி, ஆளென்று அவளோடு பேசிக் கொண்டே இருந்தோம். விசேட பேச்சுப் பயிற்சிகளுக்கென்று, மணித்தியாலத்துக்கு நூற்றியிருபது யூரோக்கள் கொடுத்துக் கூட, அவளுக்காக காசைக் கரைத்தோம். மற்றப் பிள்ளைகளிலிருந்து ஒதுங்கி விடக் கூடாதென்பதற்காக, வலிந்து எங்கும் கூட்டிச் சென்றோம். நாங்களும் சேர்ந்து விளையாடினோம். ஐபாட், ரீவிகளை குறைத்துக் கொண்டு சொற்களை சொல்லிக் கொடுத்தோம். பெரியப்பாமாமாசித்தி….என்று உறவுக்காரர்களைச் சொல்லிக் கொடுத்தோம்.

ஆனால், அவளால் இன்று வரைக்கும் கோர்வையாய் ஒரு வசனம் பேச முடியவில்லை. தாயில் உலகத்திலில் இல்லாத பாசம் அவளுக்கு. அடிக்கடி தாயின் கன்னங்களைக் கொஞ்சா விட்டால், அவளுக்குப் பத்தியப் படவே படாது. உண்மையில் தாயிற்கு, அந்தக் கொஞ்சல்கள் அவசியமாயிருந்தது. மதுவே தான் தன் உலகம் என்று இருப்பவள், இன்னொரு பிள்ளைக்கும் பிடிவாதமாக மறுத்து விட்டாள். எங்கே, தான் மதுவை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவேனோ என்ற பயம் அவளுக்கு. நான், கொஞ்சம் கூட கோபப்பட்டு உரத்துக் கதைக்கக் கூடாது மதுவுக்கு. உடனும், ”அப்பாகப்பீ…” என்பாள். நான் ஓம், என்று சொல்லும் வரை விட மாட்டாள். திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். பதில் சொல்லா விட்டால் அழத் தொடங்கி விடுவாள்.

மொழி வெளி வராத அவளால், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிப்படுத்தவே தெரியவில்லை. பாவம் மது. எப்போதும் தன் கைகளைத் தான் கடித்து வைப்பாள். அது தான், அவள் உணர்வை வெளிப்படுத்துகிற விதம். கடித்துக் கடித்து, கைப்பகுதி வெள்ளைப் புண் தழும்பாகிக் கிடக்கிறது. அல்லது, தன் இரண்டு கைகளையும் குனிந்து உதறுவாள். யாராவது, தூக்கி அணைத்தால், அவளோடு பேசினால் மிகுந்த சந்தோசப்படுவாள்.

ஆனால், எங்களைப் போல எல்லோராலும் எங்கள் மதுவைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சிலர் எங்களை நோகடிக்கிற அளவுக்கு, விளங்கியோ, விளங்காமலோ ஏதாவது கேட்டு விடுவார்கள். ”இன்னும் கதைக்கேல்லையோஎன்பது தான் பெரும்பாலும் எதிர்கொள்கிற கேள்வி. ஒவ்வொரு முறை, இப்படி ஒவ்வொருவர் கேட்டு விடுகிற போதும், மது தூங்கிய பிறகு, மனைவி இரவிரவாக அழுது தீர்ப்பாள். நான் விடியும் வரை ஆறுதல் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

எல்லாப் பிறந்த தினங்களிலும், மகிழ்ச்சியாய் போய், கடைசியில் நாங்கள் கவலையுடன் தான் வீடு திரும்புவோம். ஒரு படத்துக்கும், மதுவால் சரியாக நிற்க முடிவதில்லை. படம் எடுக்கிறவர் முதல், எல்லோரும், எங்கள் மதுவை சத்தமிட்டுக் கூப்பிடுவார்கள். உறுக்குவது போல இருக்கும். பட்டென்று மனைவயின் முகம் வாடிப் போய் விடும். நான் தான், மதுவை தூக்கிக் கொண்டு சமாளிப்பேன்.

பெரியவர்களுக்கே மதுவைப் புரியாத போது, சின்னப் பிள்ளைகள் எப்பிடி? எத்தனை ஆயிரம் விளையாட்டுச் சாமான்கள் வீட்டில் கிடந்தாலும், எல்லாப் பிள்ளைகளையும் போல, மற்றவர்களுடைய வீட்டு விளையாட்டுப் பொருட்களுக்கு மது ஆசைப்படுவாள். அந்தப் பிள்ளைகளோ கொடுக்க மறுப்பார்கள். நிலத்தில் விழுந்து, காலடித்து மது அழுவாள். சில நேரங்களில், சில விளையாட்டுப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டு வர அடம் பிடிப்பாள். அந்த நேரங்களில், வேறு வழியில்லாமல், குழறக் குழறத் தான் மதுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்போம். நமக்குத் தான், எல்லா வீட்டு நிகழ்வுகளிலும் தர்மசங்கடமாக இருந்தது. அதற்காக, நாங்கள் ஒதுங்கிப் போவது, மதுவின் முன்னேற்றத்திற்கும், வாழ்விற்கும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எங்களை எச்சரித்திருந்தார்கள்.

இப்படித் தான் ஒருமுறை, என் நண்பனின் வீட்டுக்குப் போயிருந்த போது, விளையாட்டுச் சாமான் கொடுக்காத கோபத்தில், அவர்களின் இரண்டு வயது மகனின் கையை மது கடித்து விட்டாள். இரத்தக் காயமாகி விட்டது. நாங்கள் கேட்காத மன்னிப்பு இல்லை. அவர்கள் அதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் தான் குற்றவுணர்வில் துடித்துப் போனோம். அது தான், மதுவிற்கு, முதலும் கடைசியுமாக மனைவி அடித்த அடி. நான் எதிர்பார்க்கவேயில்லை. வீட்டுக்கு வந்ததும், கைளால் பளார், பளார் என்று மதுவின் முதுகில் மூன்று அடிகள். நான்கரை வயதில் மதுவிற்கு விழுந்த அடி. அவளும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் அடிக்கடி கொஞ்சிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து. ஏங்கிப் போய் விட்டாள் மது. இரவு முழுக்க, நடுங்கி நடுங்கி திடீர் திடீரென்று எழுந்து வீரிட்டுக் கதறினாள். காய்ச்சல் வேறு காயத் தொடங்கியிருந்தது.

மனைவிக்கு துயரம் தாங்க முடியவில்லை. தானா தன் மதுவை அடித்தேன் என்று கேட்டுக் கேட்டுத் தலையிலடித்தாள். இழுத்து, இழுத்து மதுவைக் கொஞ்சித் தீர்த்தாள். அது, மனைவியின் இயலாத கோபம், கடவுள்கள் மேல் இருந்த ஏமாற்றம், விதியின் மீதிருந்த தீராத வெறுப்பு. தேக்கி வைத்திருக்கிற எல்லா துயரங்களின் பாரத்தையும், அவள் மூன்று அடிகளில் மதுவின் முதுகில் இறக்கி வைத்து விட்டு, திடீரென்று நிறுத்திக் கொண்டு விட்டாள். அன்றிரவு முழுக்க சாமம் சாமமாக, தலையிலும், நெஞ்சிலும் அடித்து அடித்து அழுதாள். என்னோடும் எரிந்து விழுந்தாள்.

நான் மதுவை விட, மனைவியைப் பொறுமையாகக் கையாள வேண்டிருந்தது. எல்லாவற்றையும், ஒரு பெரிய இடிதாங்கியைப் போல தாங்கினேன். குளியலறைக் கதவைப் பூட்டிக் கொண்டு, வாய்க்குள் துவாயை வைத்தபடி, கண்ணாடியைப் பார்த்து வெடித்து அழுதேன். என்ன பாவம் செய்தேன் நான்? எனக் கேட்டுக் கேட்டுக், கைகளால் என் நெஞ்சைக் குத்தினேன்.

அது போலத் தான் அம்மாவோடு ஒருமுறை நடந்த வாய்ச் சண்டையும். அப்பம்மாவென்றால் மதுவுக்கு காணும். மடியில் இருந்து கொண்டு, மணிக் கணக்கில் ரீவி பார்த்து, அப்பிடியே தூங்கியும் போய் விடுவாள். அம்மாவுக்கும், மதுவின் பாசையெல்லாம் அத்துப்படி. ஒரு தடவையிலே புரிந்து விடுவார். வேணுமெண்டு அம்மா சொல்லவில்லைத் தான். ஆனால், ஓரே நேரத்தில் எனக்கும், மனைவிக்கும் அந்தச் சொல், படுபயங்கரமாய் சுட்டு விட்டது. நெருப்பில் விழுந்த புழுப் போலத் துடித்துப் போனோம். அது ஒரு வியாழக்கிழமை. சீரடி சாய்பாபா கோயிலில் தான் நடந்து முடிந்தது. எக்கச்சக்கமான சனங்கள். நேரமும் போய்க் கொண்டிருந்தது. மது வேறு வெக்கைக்கோ, உடுப்புக்கோ சினந்து அழத் தொடங்கியிருந்தாள். கோயிலின் அமைதியைக் குலைப்பதாக, சனங்கள் வெறுப்பு உமிழுகிற பார்வையை எறிந்தார்கள்.

அம்மா, மிக இயல்பாகத் தான் இந்த ஏலாத பிள்ளைக்கு ஒருக்கா,முதல்லை அர்ச்சனை செய்ய விடுங்கோ!” என்று ஐயரின் காதுபடச் சொன்னார். ஐயர், மீண்டுமொரு முறை அதை உரத்து, ”ஏலாத பிள்ளை யார்? வாங்கோ முன்னுக்குஎன்றார். சனம் முழுவதும் மதுவையும், மனைவியையும் பார்த்தார்கள். மனைவி, என் மீது எரிக்கிற பார்வையை வீசினாள். நான், சனங்களென்றும் பாராமல், அம்மாவின் மீது புறுபுறுத்தேன்.

அம்மா, விடிஞ்சதும் தெரியாது இருண்டதும் தெரியாதது போல, அப்பாவியாய் என்னைப் பார்த்தார். காரில் திரும்பி வரும் வரை எதுவும் கதைக்கவேயில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் கத்தினேன். வாய்க்கு வந்தபடி அம்மாவைப் பேசினேன். அம்மா! அழத் தொடங்கினார். மது பயந்து போய், அப்மம்மாவைக் கட்டிக் கொணடாள். தன் சின்ன விரல்களால், அப்பம்மாவின் கண்ணீரைத் துடைத்தாள். ” அப்பா! கப்பீகப்பீ…” என்று என்னைப் பார்த்துக் கத்தினாள்.

அந்த வியாழக்கிழமைக்குப் பிறகு, அம்மா எங்களோடு சாய்பாபா கோயிலுக்கு வருவதைத் திட்டமிட்டு, அங்கு நோகுது, இங்கு நோகுது என்று சொல்லித் தவிர்க்கத் தொடங்கினாள். இத்தனைக்கும், கோபதாபங்களை தூக்கிப் பிடிக்கிற ஆளில்லை அம்மா. அடுத்த நிமிடமே மறந்து போய் விடுவாள். அம்மாவும், மதுவுக்காக விரதங்கள் இருப்பதும், கோயில்களுக்கு அர்ச்சனை செய்வதும் எனக்கும் நன்றாகத் தெரியும். தன் மகனின் பிள்ளை கதைக்குதில்லை என்பதில், அம்மாவுக்கும் தான் பெருத்த வருத்தமிருக்கிறது.

ஆனால், இப்படி நானும் மனைவியும் காயப்பட்டு விடுவோமென்று, அம்மா நினைத்தே பார்த்திருக்கவில்லை. சரியாக உடைந்து போனார். மருமகளிடம் போய் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் காயம் காயம் தான்.

நாங்களும் கோபப்பட்டிருக்கக் கூடாது தான். மது, ஏதோவொரு வகையில் ஏலாத பிள்ளை தான். அதை ஏற்றுக் கொண்டு தானே நாங்கள் ஆக வேண்டும். ஊர் இப்படியும் கதைக்கும். சனங்கள் அப்படியும் காயப்படுத்துவார்கள் என்று நாங்கள் தான் பக்குவப்பட்டிருக்க வேண்டும். காயங்களுக்கு மேல் காயம் கண்டு, இன்றைக்கு அப்படியொரு நிலைக்கு நாங்கள் இருவரும் வந்து விட்டோம் தான். ஆனால், அன்றைக்கு அப்படி நாங்கள் இருக்கவில்லை. எங்களால் அப்படி இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வது? தவமாய் தவமிருந்து பெற்ற எங்கள் மதுவை, யார் குறையாகப் பார்த்தாலும், தாங்கிக் கொள்ள முடியாமல் கிடந்தது. என்னை விட, என் மனைவி உடைந்து நொருங்கிக் கொண்டிருந்தாள். விதியை ஏற்றுக் கொள்ளப் படாத பாடு பட்டோம்.

இப்படித் தான், நாங்கள் இருவரும் எங்கள் துயரங்களில் இருந்து அடிக்கடி வெளியேற வேண்டி இருந்தது. இதே போலவும், இதையும் விடவும் சிரமப்படுகிற பிள்ளைகளின் பெற்றோரோடு கதைத்து ஆறுதலடைந்தோம். என்னால் முடிந்த எல்லா மகிழ்ச்சிகளையும், மதுவுக்கும், மனைவிக்கும் நான் என்னை ஒறுத்து வழங்கிக் கொண்டே தான் இருக்கிறேன்.

இப்போ, மது எட்டு வயதுப் பெண் பிள்ளை. நாங்களும், கொஞ்சம் மரத்துப் போய் விட்டோம் தான். மது, அவளின் விசேட பள்ளிக்குப் போய் வருகிறாள். தனக்குத் தேவைப்படும் போது மட்டும், தேவையானதை ஒற்றை வார்த்தையில் சொல்லி முடிக்கிறாள். மற்றப் பிள்ளைகளைப் போல தன் வேலைகளைத், தானே தனித்தும் செய்கிறாள். இந்தப் பேச்சு ஒன்று தான், அவளிடமிருந்து எங்கோ மறைந்து போயிருக்கிறது. கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று வயதுக்கு மீறி மது விரைவாகவும், சரியாகவும் செய்கிறாள். ஏதேதோ பார்த்து எழுதுகிறாள். அச்சு அசலான கையெழுத்து மதுவினுடையது. இருந்தாலும், கையைக் கடிப்பதையும், உதறுவதையும் அவள் விடவேயில்லை. அது தான், மதுவினுடைய மொழி என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.

இப்போ, அழகாக படங்களுக்கு முகம் கொடுப்பாள். புன்னகைப்பாள். எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்து விளையாடுவாள். மற்றப் பிள்ளைகளுக்கும், மதுவைப் புரிந்து கொள்கிற பக்குவம் வந்து, தங்களோடு சேர்த்துக் கொண்டு விளையாடுவார்கள். எப்போது பார்த்தாலும், மது..மதுஎன்று கூப்பிட்டபடி மதுவையே அவர்கள் சுற்றி வருவதைப் பார்க்க, மனைவி பூரித்துப் போவாள்.

மது, ஒரு போதும், தனித்துப் போக மாட்டாள் என்ற நம்பிக்கை மனைவியிடம் நிறையவே வந்து விட்டது. என்றைக்கோ, ஒரு நாள் அவள் பேசி விடுவாள் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களிடமிருந்து நீங்கவேயில்லை. இப்போதும், நாங்கள் சீரடி சாய்பாபவிற்கு விரதமிருந்து கொண்டேயிருக்கிறோம்.


இன்று நாங்கள் மதுவுக்கு ஒரு இரகசியப் பரிசு கொடுக்கப் போகிறோம். மனைவியும், நானுமாகத் தேடிக் கண்டு பிடித்தஒரு பேசும் யுனிக்கோண்பொம்மை அது. அதில், நாங்கள் மது விரும்புகிற வார்த்தைகளைப் பேசி சேமித்து வைத்திருக்கிறோம். ”கலோ மது, லவ் யூ மது, குட்மோர்ணிங் மதுஎன்று தொடங்கி ஒரு இருபது உரையாடல்களை ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்திருக்கிறோம். இன்று மாலை, இந்தப் பேசும் யுனிக்கோண், எங்கள் மதுவோடு பேசத் தொடங்கும்.  இனியில்லையென்ற சந்தோசத்தில் மது துள்ளிக் குதிப்பாள். இதைவிட, மது பாடினால், அதுவும் பாடுகிற வசதி கூட இருக்கிறது. இன்று மாலை முதல், எங்கள் மது, அவளுடைய யுனிக்கோணோடு பேசிக் கொண்டிருப்பாள். இனி, யுனிக்கோணைக் கட்டிக் கொண்டு தூங்குவாள். யுனிக்கோணுக்குத் தலை இழுப்பாள். யுனிக்கோணுக்கு சாப்பாடு கூட தீத்துவாள் என்று நினைக்கிறோம். சில வேளைகளில், இந்தப் பேசும் யுனிக்கோணால், மது கதைக்கத் தொடங்கவும் கூடும் என்கிற மெல்லிய ஏக்கமும், இல்லாமல் இல்லைத் தான். அவளின் சந்தோசம் தான் எங்கள் இருவரதும் சந்தோசமே. அவள், அவளின் யுனிக்கோணோடு சந்தோசமாயிருக்கட்டும்.

 

நாங்கள் இருவரும், எங்கள் றோஸ் நிற யுனிக்கோண், எங்களோடு கதைக்கிற பொன்னான நாளுக்காக, எட்டு வருடங்கள் தாண்டியும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

 

 

----- 000 ----0000 ---


- தீபிகா-

 

(காற்றுவெளி ஆடி 2023 இதழில் வெளிவந்தது)

நம்மவர் சிறுகதைச் சிறப்பிதழ்