More than a Blog Aggregator

Aug 3, 2012

"அப்பா இல்லாத நண்பர்கள்"


அப்பா இல்லாத நண்பர்கள்




அப்பா இருந்த போது
நான் எத்தனை சந்தோசமாயிருந்தேன்.


என்னை கிளுகிளுப்பூட்டி சிரிக்க வைக்கும்
அவரின்
மீசை குத்தும் முத்தங்களில்
இன்னும் சிலிர்க்கிறது உடம்பு.

நான் கைவாரி விடுகிற
அப்பாவின் வளர்ந்து சுருண்ட
கறுப்பு ரோமங்களின் அடர்த்திக்குள்
மீண்டுவர விருப்பின்றி
சிக்குண்டு கிடக்கிறது ஞாபகம்.

இப்போது
அம்மா அணிந்துகொள்கிற
அவரின் சட்டைகளில்
இன்னும் போகாமலே இருக்கிறது.
என் அப்பாவின் வாசம்.

அம்மாவினுடைய வறண்ட விழிகளிலும்
வெறுமையான நெற்றியிலும்
தினம் தினம்
அப்பா இல்லாத வலியை
மௌனமாக கடந்து செல்கிறேன்.

அம்மாவை எப்படி சிரிக்கச் செய்வது?
என்கிற யோசனையிலேயே
அழுது தீர்க்கின்றன என் விழிகள்.

நானினி
அப்பா இல்லாத ஒரு குழந்தையாய்
நீண்டதூரம் வலிகளுடன்
மிச்சமிருக்கும் வாழ்க்கையின் பாதையில்
அம்மாவையும் சுமந்து கொண்டு
பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும்
சிரியாவிலும்
எல்லா நாடுகளிலும் இருக்கும்
அப்பா இல்லாத பிள்ளைகளின்
முகங்களில் எழுதியிருக்கிற
துயரக் கதைகளின் வரிகளை
மொழியின் திரைகளை விலக்கிக் கொண்டு
என்னால் இப்போது
நன்றாக வாசித்துணர முடிகிறது.

நாங்கள்
"அப்பா இல்லாத நண்பர்கள்."


---xxx----

(காற்றுவெளி -ஆவணி 2012  இதழில் வெளியானது)
 



தீபிகா
13.03.2012
10.59 A.m

Jun 16, 2012

அப்பா

அப்பா




ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. 
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

                                                        -Wilhelm Busch-



அப்பா...

ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான்.ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. 

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும்,அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ..அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?




மனைவி,பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலிசுமந்து வலிசுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம்,துணிச்சல்,விடாமுயற்சி,நம்பிக்கை,உழைப்பு.....இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதை”

“ஒண்டுக்கும் யோசிக்காதை”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதை”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள் என்பவர்கள்


பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

பிள்ளைகளின் நெம்புகோல்கள்

பிள்ளைகளின் அச்சாணிகள்

பிள்ளைகளின் சூரியன்கள்

பிள்ளைகளின் திசைகாட்டிகள்

பிள்ளைகளின் ஆசிரியர்கள்

பிள்ளைகளின் நம்பிக்கைகள்.

.... ..... ..... ..... ..... ..... .... .... ....



(சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி எழுதிய உரைநடை)



----xxx----xxx----





தீபிகா

11-06-2012

9.18 A.m



May 12, 2012

“அம்மா என்றால் சும்மா இல்லேடா”
(உரைநடை)
                                 



அன்பு,
ஆதரவு,
அர்ப்பணிப்பு,
பொறுமை,
தியாகம்,
விட்டுக்கொடுப்பு,
கரிசனை,
காதல்,

ஆகிய அத்தனை பரிசுத்தமான உண்மை உணர்வுகளையும்
காலநேரம் பாராது அள்ளிக் கொடுக்கின்ற அட்சயசுரபி,
"அன்னை" என்கின்ற
ஒப்புவமையற்ற 

ஒரேயொரு உறவான தாய்மை மாத்திரமே.

நாம்,
மனித விழிகளுக்குள் புலப்படாத 

எம்மிலும் ஆற்றல் படைத்த
பிரபஞ்சத்தின் மாபெரும் மகாசக்தியை
கடவுள் என்று வணங்குகின்றோம்.
அந்த மகா சக்தி எமக்கெல்லாம் அளித்திருக்கிற
மாபெரும் சக்தி வடிவானவள் தாய்.

நாம் அகக்கண்ணால் மட்டுமே தரிசிக்கிற ஆண்டவன்
உயிர்கொடுத்து, உருவளித்து ஒவ்வொருவருக்கும் உறவென்றாக்கி
நம் பார்வைகளுக்கு
தரிசிக்க கொடுத்திருக்கிற உத்தமியே அம்மா.

கிட்ட இருக்கிற போது , நம் கைகளில் இருக்கிற போது,
அறிந்து கொள்ளத் தவறுகிற அல்லது 

அலட்சியமாய் இருந்துவிடுகிற
அம்மா என்கிற அழகு தேவதையினுடைய
அன்பின் ஆழத்தையும், ஈரத்தையும்

பறிகொடுத்து விட்டபிறகு தான்
மனம் பதைபதைக்க நினைத்து நினைத்து உருகுகிறோம். 

இருக்கும்போது கொடுக்கத் தவறிய ஈரமுள்ள அன்பை 
இழந்த பிற்பாடு ஈரக்கண்ணீராய் 
சொரிந்து தள்ளுகின்றோம்.

அன்னை என்கிற மகரஜோதி
அருகிருந்து ஆண்டாண்டு காலமாய் ஒளி தருகிற போது
அதன் வெளிச்சத்தின் வேர்களை மதிக்கத் தவறுகிற,
மரியாதை செய்யத் தவறுகிற நம் பேதை மனசுகள்
அணைந்த பிறகு அங்கலாய்க்கிறது.
பிரிவுக் காற்று அள்ளிக் கொண்டு 

பிரியாவிடை சென்ற பிறகு பேதலிக்கிறது.

எனவே,
உறவு விருட்சத்தின் நதிமூலமாகி வெளித்தெரியாமல்
தன் அத்தனை கிளைகளையும் தாங்கி நிற்கிற
அம்மா என்கிற ஆணிவேருக்கு 

ஈரமிகு அன்பை ஊற்றுவோம்.
இருக்கிற போது இதயத்துக்கு மலர் தூவுவோம்.
விழித்திருக்கிற போது விழுதுகள் 

ஊஞ்சலாட்டுகிற காட்சியை பரிசாய் கொடுப்போம்.

ஒரு தாயின் இதயம் பிள்ளைகளுக்காய் 
எத்தனை முறை துடித்திருக்கும்? 
எத்தனை நாள் பசிகிடந்திருக்கும் அவள் வயிறு?
எத்தனை மணி நேரம் காத்திருந்திருக்கும் அவள் விழிகள்?
எத்தனை தூரங்களை வலியோடு கடந்து சென்றிருக்கும் 

அவள் பாதங்கள்? 
எத்தனை விருப்பங்களை விட்டுக்கொடுத்திருக்கும் 
அவள் மனசு?
எத்தனை காயங்களை..
எத்தனை சொற்களை...
எத்தனை வலிகளை....
எத்தனை பிரச்சனைகளை...
எத்தனை எத்தனை சோதனைகளை
தினமும் எதிர்கொண்டிருக்கும் அவள் வாழ்க்கை.

ஒரு மனிதன் வளர்கிற போது 
புரிந்து கொள்ள முடியாதிருக்கிற 
அம்மா என்கிற தன்னலமற்ற தியாகத்தின் உச்சத்தை,
அவன் வளர்க்கிற போது, 

தன் குழந்தைகளை வளர்க்கிற போது
நிச்சயமாக உணர்ந்து கொள்வான்.

காதலியின் பார்வையைக் காட்டிலும் 
அம்மாவின் பார்வையில் இருக்கிற அன்பின் ஈரத்தை 
நாம் மறுக்க முடியாது.
ஒரு தாயின் புன்னகையில் எல்லா காயங்களும் 

ஆறிவிடுமெனின் அது பொய்யே இல்லை.

அம்மாவின் தாய் மடியில் படுத்து தூங்குகிற 
அலாதியான சுகம், உலகின் எந்த சொகுசு 
பஞ்சு மெத்தைகளிலும் கிடைத்துவிடாது என்பது 
அனுபவித்த மனசுகளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் தாயின் கையால் உருட்டித் தருகிற உணவின் ருசி 
பிள்ளைக்கு எந்த உணவகத்திலும் கிட்டாத 
திகட்டும் உணவில்லையா?
அந்த உருளையில் தாயின் உயிர் வாசத்தை 

நாங்கள் நுகரமுடியுமில்லையா?
என்றும் மறக்க முடியாத அந்த நினைவின் வாசத்தை 

நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் 
ஏங்கி ஏங்கி கரைவது என்பது
என்றும் தொடரும் உறவுக்கதை இல்லையா?


"அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம் 
வேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.
தாய் என்கிற மூலத்தை தழுவி தாய்மொழியும், 

தாய்நிலமும் தங்களை தரமுயர்த்தி நிற்கின்றன. 
உலகின் எந்த கோடியில் ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவன் தன்
தாயையும்,
தாய்மொழியையும்,
தாய்நிலத்தையும்
மறக்க முடியாது. மறந்திருக்கவும் கூடாது.

தினம் குறித்து கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல அன்னையர் தினம். 
அது தினந்தினமும் கொண்டாடப்பட வேண்டிய 
தாய்த் திருநாள்.

ஏனைய எல்லா தினங்களையும் போல 
வெறும் காகித மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும்
இந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி விட முடியாது. 

அம்மா என்கிற பாசமிகு உயிரின் ஆழந்தொட 
எந்த மொழியின் வார்த்தைகளாலும் முடியாது.

பத்து மாதம் தாங்கிய கருவறைகளின் மனசுகளை 
காயமின்றி மயிலிறகு வார்த்தைகளால் வருடுவோம்.
உதிரப் பூக்களை தாங்கிய தியாகக் கரங்களை
இறுகப் பற்றிக் கொள்வோம்.

வயிற்றிலும், இடுப்பிலுமாய் 
எம் பாரம் சுமந்த உடல்களின் பழுத்தாங்கி நடந்து
இப்போ வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களை 

பிடித்து விடுவோம்.
தோல்விகளிலும், விரக்திகளிலும் 

துவண்டு வந்த பொழுதுகளில்
தம் ஒராயிரம் முத்தங்களால் ஆறுதல் கொடுத்து
எம்மை நிமி்ர்ந்தெழ வைத்த அம்மாக்களின் வற்றாத 

பாச முத்தங்களுக்கு பதில் முத்தங்கள் பரிமாறுவோம்.

நாம் தலை சாய்த்த முதல் தோள் 
நாம் முகம் புதைத்தழுத முதல் மடி
எம் கண்ணீர் துடைத்த முதல் கைவிரல்
எம்மை முத்தமிட்ட முதல் இதழ்
நாம் பார்த்துப் புன்னகைத்த முதல் முகம்
எல்லாம்.....எல்லாம்.....
அம்மா என்கிற ஒற்றை ஜீவனுக்கே சொந்தமானது.

முதன்முதலில் கிடைத்த அந்த முழுசுகங்களின் 
சுகந்தம்,
நிறைவு,
திருப்தி,
மகிழ்ச்சி
இவையெதுவும் ஒரு மனிதனுக்கு அதற்கு பிறகு 

அதே சுகங்களுடன் அன்னையை தவிர 
வேறு எவராலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

தெய்வத் திருமகளான தாய், தன் குழந்தைகளுக்கு 
அள்ளிக் கொடுக்கிற அமுதசுரபிகளல்லவா அவை. 

பலநேரங்களில் நாம் வெளிப்படுத்திய விவரமறியாத எங்கள் 
கோபங்களை,
புறக்கணிப்புக்களை,
சுடுசொற்களை,
அலட்சியங்களை,
அவமானப்படுத்தல்களை எல்லாம்
நெஞ்சு நிறைந்த பாசத்தோடும், 

இமயமளவு பொறுமையோடும் தாங்கிக் கொண்டு
திரும்பத் திரும்ப எங்களை எப்போதும்
தாங்கத் தயாராயிருக்கிற தாய்மையின் மாண்பை
வாழ்த்துவதற்கும், வணங்குவதற்கும்,
நினைந்து நினைந்து மனமுருகி 

எம் மனச்சாட்சிகளின் ஆழத்திடம் 
மன்னிப்பு கோருவதற்கும்
ஒற்றை நாள் போதுமானதாகவே இருக்காது.

தன்னலமற்ற அம்மாக்களின் தியாகப் பெருவாழ்வுக்கு 
என்றும் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருப்போம்.
இருக்கும்வரை அவர்களின் இதயங்களை 

மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வோம்.
புனிதமான தாய்மாரின் மனசுகள்

புண்படும்படியாக நடவாதிருப்போம்.

வைத்திருப்பவர்கள் 
தங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டும்
இழந்துவிட்டவர்கள்
தங்கள் இதயங்களில் தாங்கி்க் கொண்டும்
அவர்களை சுமந்து சென்று கொண்டேயிருப்போம்.

ஏனெனில் 
அம்மாக்களின் இருப்பென்பது 
எங்கள் உயிருக்கான வீரியம்.
எம் பார்வைகளுக்கான அகல்விளக்கு.
எம் பாதச்சுவடுகளுக்கான திசைகாட்டி. 






               (அம்மா...அம்மா..எந்தன் ஆருயிரே..)



...xxx....xxx.....




முற்றும்.



தீபிகா.
02-05-2012
11.16 P.m
(அன்னையர் தினத்துக்காக எழுதிய உரைநடை)







  

Apr 11, 2012


நானொரு உதைபந்தாட்ட வீரன்



நீண்ட நாட்களுக்கு பிறகு
விடுதலையாகியிருக்கிற எங்கள் மைதானத்தில்
மிச்சமிருக்கும் இளைஞர்கள்
பந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.



அவர்களை நோக்கி எறிகிற
என் உற்சாகச் சொற்களை
பொறுக்கியெடுக்க முடியாமல்
இளைஞர்களின் கவனங்கள்
பந்தைச் சுற்றி ஓடித் திரிகின்றன.

எவரும் பறித்தெடுக்க முடியாதபடி
நான்
கால்களால் முத்தமிட்டுக்கொண்டே
பந்தை நீண்டதூரம் கூட்டிச்செல்வேனென்பதும் ,
மையத்திலிருந்து கொண்டே
மூன்று முறை இலக்கடித்திருக்கிறேனென்பதும் ,
எங்கள் கிராமத்துக்கே
நன்கு ஞாபகமிருக்கிறது.

இப்போதும்
வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
வெற்றிக் கேடயங்களை
நான் வாங்கி உயர்திய போது ,
இந்த இளைஞர்களது
கைகளிலிருந்தும் தான்
உற்சாக ஒலியெழுந்து அடங்கியது.

நான் சேர்த்து வைத்திருக்கிற
பரிசளிப்பு புகைப்படங்களின் மூலையில்
பாதி வெட்டுண்ட
இவர்களின் முகங்களும் சிரித்தபடியிருக்கின்றன.

இருந்தாலும்
என்னை சேர்த்து விளையாட முடியாதென
இவர்கள் சொல்லி விட்டார்கள்.
இனிமேல்.

அதனாலென்ன... ...

தினமும், வந்தமர்ந்து
கைதட்டி விசிலடித்து
இவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுதானிருக்கும்
என் விளையாட்டு மனசு .

என்னிடம் ஒரு சோடி
பொய்க்காலும்…
ஊன்று கோலும்…
இருக்கும் வரை.



---- xxx ----


தீபிகா.
25.02.2012
08.04 P.m

Mar 20, 2012


கண்களை மூடும் காட்சிகள்



தங்கள்
பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை
பார்க்கிற தாய்மார்களின் கண்கள்
பெற்ற வயிறுகளை
கைகளால் அடித்தபடி வழிகின்றன.



சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின் 
காயங்களிலிருந்து,
இரத்தம் சிந்தச் சிந்த விரியும்
அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்
தாய்மார்களின் துக்கம் நிறைந்த
மூச்சுக் காற்றையும் அடைக்கின்றன.

பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை
தாய்மார்கள் பார்க்கவேண்டிய
கனத்த துயரத்தின் விதியை
காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.

தாய்மாரின்
வறண்டு போன தொண்டைகளிலிருந்து
உருகிவிழும் வார்த்தைகளும்
கண்கள் கட்டப்பட்டிருக்கும்
நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்
நலிந்து போய் சாகின்றன.

கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற 
கோயில்களின் வாசல்களில்
தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.
எல்லா பிரார்த்தனைகளும்
கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.

இனிமேல்
தொட்டும் பார்க்க முடியாதபடி
குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்
கைகள் கட்டப்பட்டபடி கிடந்து
தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.

எந்தப் பிள்ளைகளைப் பற்றியும் 
எந்தத் தாய்மார்கள் பற்றியும்
கவலை இல்லாத வியாபாரிகள்
தங்கள் கள்ளச் சந்தைகளில்
பிள்ளைகளின்
நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு
இவர்கள் திருகிக் கொன்ற
நீதி தேவதையை கூட்டி வருவதாக
பொய் சொல்லிச் சொல்லி
வியாபாரிகள் சனங்களை
இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.

திரும்பிவர முடியாத பிள்ளைகளின் 
காயப்பட்ட தேகங்களை 
திரும்ப திரும்ப குவித்துக் காட்டி
பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்
வலி நிறைந்த கண்களையும்
காட்சிகள்
விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன.



---xxx----




தீபிகா
13.03.2012
9.36 P.m













Mar 12, 2012

  உண்மை அறியும் பொய்கள்



சமாதானம் தருவிக்கப்பட்டதாய்
சொல்லப்படுகிற எனது நிலத்தில்
வீதிகளை விழுங்கிக்கொண்டு வளர்ந்திருக்கிற
விளம்பர மரங்களின் நிழலில்
நாய்களுடன் சேர்ந்து
வீடுகள் பறிக்கப்பட்ட உடல்களும்
படுத்துக் கிடக்கின்றன.


திரும்பிப் பெறமுடியா இழப்புக்களோடு 
திரிகிற சனங்களின் முகங்களில்
படரமுடியாத மகிழ்ச்சியின் ரேகைகள்
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
எதிர்பார்ப்புகளற்று செலவு செய்கின்றன.


சிறைப்பிடித்து காட்சிக்கு வைத்திருக்கும் 
மிருகக்காட்சிச் சாலை விலங்குகளை
பார்க்கும் ஆவல் நிறைந்த
அதே கண்கள்
குளிர்சாதனப் பேரூந்துகளில் வந்திறங்கி
கும்மாளமிட்டபடி ஊரெங்கும்
மிடுக்குடன் அலைந்து திரும்புகின்றன.

மொட்டையடிக்கப்பட்டிருக்கும் நந்தவனங்களில்
இறக்கைகள் பிடுங்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சிகள்
இயலாமைகளோடு மெல்ல மெல்ல
ஊர்ந்து திரிகின்றன.


இனிமேல் தேன் சேகரிக்க 
அனுமதிக்கப்படாத அவைகள்
வயிறு நிறைப்பதற்காக
கைவிடப்பட்ட வெளிகளில்
அங்கும் இங்கும் அலைகின்றன.

நட்சத்திரங்களற்ற வானத்தில்
குழந்தைகள் தேடிக்கொண்டிருக்கும்
அவர்களின் தந்தைமார் பற்றி
எந்தப் பதிலையும் கொடுக்காதவர்கள்
நீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்
அவர்களுக்கு பரிசளிக்கிற காட்சியை
படமெடுத்துக் கொண்டு போகிறார்கள்.

பகலில் சமாதானம் விற்கப்படும்
எங்கள் நகரத் தெருக்களில்
இரவில் ,
நாய்கள் அமளியாய் குரைக்கையில்
சாளரங்களை சாத்திக்கொண்டு
எல்லா இதயங்களும்
எப்போதும் போலவே படபடக்கின்றன.

துப்பாக்கிகள் கோடு கிழித்திருக்கிற
வெளித்தெரியாத வட்டங்களுக்குள்
குடியிருக்கிற எங்கள் சனங்கள்
இப்போ
தாம் எந்தப் பயங்களுமற்று
மகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்
வெளியே சொல்ல கேள்விப்படுகிறார்கள்.


--- xxx ---



தீபிகா
23.02.2012
11.13 A.m














Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.














Feb 6, 2012

திரும்ப வரும் முகங்கள்



திரும்பவும் திரும்பவும்
விழிகளை காயப்படுத்திக்கொண்டு
நினைவுகளுக்குள் வந்து விழுகின்றன.
மனிதர்களின் முகங்கள்.


காலம் காட்சிப்படுத்தும்
அம் மனிதர்கள் பற்றிய
விசித்திர துயரோவியங்களை
நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?

ஒரு பல் வைத்தியரின்
அழகற்றுத் துருத்திக்கொண்டிருக்கும்
முன் வெண் பற்களை...
இயற்கை நிரந்தர சவரம் செய்துவைத்திருக்கும்
ஒரு சிகையலங்கரிப்பாளனின்
ஒளி மிளிரும் தலையை...

கொப்பிகள் வாங்கும் சில்லறைகளுக்காக
புத்தகத் தாள்களில்
கச்சான் பை ஒட்டிவிற்கும் சிறுவனை...

இரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்
ஒரு செயற்கைகால் கொண்டவனிடம்
பிச்சை கேட்கிற காட்சியை...

"நாய்கள் கவனம்" என்று
வெளியே எழுதி வைத்திருக்கிற
வீட்டிற்குள்ளே கேட்கும்
மனிதர்களின் கோபம் தெறிக்கும்
பெருங் குரைப்பை...

தானியங்கிப் பணப்பரிமாற்ற எந்திரத்துக்கு
காவலிருக்கும் இரவுக் காவலாளி
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிற
மளிகைக் கடன் கொப்பியை...

மாணவர்களின் குறிப்பேட்டில்
தமிழாசிரியர் போட்டிருக்கிற
ஆங்கில கையொப்பத்தை...

"செருப்பு தைக்கணுமா" 
என்று கத்திக் கொண்டு வருகிற
முதியவரின் வெடிப்பு விழுந்த
வெற்றுக் கால் பாதங்களை...

வைரம் பதித்த நெக்லஸை
தன் கழுத்தில் பிடித்து
வாடிக்கையாளருக்கு அழகு காட்டும்
நகைக்கடை விற்பனைப் பெண்ணின்
கழுத்தில் தொங்குகிற
வெள்ளை முத்துமாலையை...

புற்றுநோய் வந்து
படுத்த படுக்கையாயிருக்கிற
ஒரு வைத்திய நிபுணரை...

குழந்தைக்கு ”றொக்ஸி” என்றும்
நாய்க்குட்டிக்கு ”றெக்ஸி” என்றும்
பெயர் வைக்கிற தமிழ் சனங்களை...


நீங்களும் 
காலக் கண்காட்சியில் இலவசமாய் வாங்கி
மனப் பையில் போட்டு வைத்திருக்கிறீர்களா?
எப்போதேனும் சில கணங்களில்.


-----xxx----


தீபிகா.
25-12-2011
9.54 P.m








Jan 25, 2012

நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்




குடிசைகளை கொழுத்துவதற்கு
நெருப்பெடுத்துக் கொடுத்த கைகள்
சாம்பல்களை தட்டிவிட்டு
கட்டடங்களுக்கான அடிக்கல்
நாட்ட வருகின்றன.



நாடகமாட வரிகிற நரிகள்
கொலைவெறிப்பாட்டுக்கு நடனமாடி
எம்மை மகிழ்விக்கலாமென சொல்லிக்கொண்டு,
உங்களையும் கூட்டி வந்துவிடக்கூடும்.
தயவு செய்து யாருமெம் நிலத்துக்கு
அப்படி வந்து
மீளமீள மொழியையும் காயப்படுத்தாதீர்கள்.
முடிந்தால்...
எம் மண்ணிலாடிய கொலைவெறிஞர்களுக்கு
ஒரு தீர்ப்புக் கொண்டு வாருங்கள்.

அழித்தலின் போது
காத்தல் பற்றி சிந்திக்காதிருந்த
எல்லா சிந்தனையாளர்களும்
இப்போ
அனுதாபக் கைக்குட்டைகளை மடித்துக்கொண்டு
அருள வருகிறார்கள்.
நாங்கள் எதிர்பார்த்திருக்காத
அவர்கள் தரும்
கைக்குட்டையின் பரப்பளவை விட
எம் கண்ணீரின் கனவளவு
அதிகமதிகம்.

அடிக்கடி ஓடிவந்து
கைகுலுக்கி...கட்டிப்பிடித்து...
முடிந்தால், அதிகபட்சம்
அரச அம்புகள் துளைத்த
சுவர்களின் ஒட்டைகளை
பூசிமெழுகி, புதுவண்ணமடித்து
புதிய கட்டடத்தை திறந்துவைத்ததாக
புகைப்படம் எடுத்துப் போகிற
விளம்பரப்பட நடிகர்களை விடுங்கள்.

உலகத்துக்கு தெரியாவிடினும்
எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அவர்களால்
எங்களுக்கு எதுவுமே ஆகப்போவதில்லையென்று.

கொத்துக் குண்டுகளை போடச் சொன்னவர்கள்
கொண்டுவந்து தருகிற பூங்கொத்துக்களில் கூட
முட்கள் இருக்கலாமென்ற பயத்தில்
வாங்கத் தயங்குகின்றன நம் விரல்கள்.
எங்களை கிள்ளுகிறவர்கள் தான்
நம் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்பது
நம் குழந்தைகளுக்கும் கூட புரிகிறது.

நமது பறவைகள்
சிறகுகளோடிருந்த போது
தூங்கிக்கிடந்த விஞ்ஞானியொருத்தர்
இப்போ
மயிர்களும் பிடுங்கப்பட்ட பிறகு
வந்து தூவுகிறார்.
கனவுகள் காண்பது பற்றிய
பிரசங்கச் சொற்களை.

துடிக்கத் துடிக்க எம் மரக்கிளைகளில்
துளைகளை போட்டுவிட்டு
இனிமேல்
எல்லாம் மறந்து வாருங்கள்.
புல்லாங்குழல் இசைக்கச் சொல்லித்தருவதாக
சொல்கிறார்கள்.
எப்படி ஏற்றுக்கொள்வது?

நாம் வளர்த்த விருட்சங்களை
எரிகுண்டுகள் விழுங்கி பசியாறிய போது
தண்ணீரடித்து அணைக்க வராதவர்கள்
இப்போ
பட்டமரங்களில் கட்டுமரங்கள்
கட்டித் தருவதாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

எல்லாமுணர்ந்து
ஏதுமற்றிருக்கிறது எம் எரிமனம்.

நான்கு திசைகளிலும்
சிங்கங்களை காவலிருத்திவிட்டு
அதற்கு கீழிருந்து ஆட்சிசெய்பவர்களுக்கு
நாமெப்போதும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஏனெனில்...அவர்கள்...
சிங்களம் சிவப்பாக்கிய செம்மண்ணில்
நாம் துடிதுடித்துக் கொண்டிருந்த போது
பார்த்துக்கொண்டிருந்தாலும்
அதே காலத்தில் எங்களின் மொழியை
செம்மொழியாக்கி தந்தவர்களல்லவா.

---xxx----


தீபிகா.
3.15 a.m

21-01-2012.






Jan 21, 2012

சத்தங்களுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும்
மகன்




வெளிச்சங்கள் அணைக்கப்பட்ட வீடுகளுக்குள்
பயம் விழித்துக்கொண்டிருந்த ஓரிரவில்
வெள்ளை எருமைகளில் இருட்டில் வந்திறங்கிய
சப்பாத்துக்கள் அணிந்த
இரத்த தாகம் மிக்க மிருகங்கள்
துப்பாக்கிகளை நெற்றியில் பிடித்தபடி
எனது மகனையும்
ஒரு நாள் இழுத்துக்கொண்டு போயின.


நாய்களின் கதறல்களையும்...
ஆட்காட்டிக் குருவிகளின் அலறல்களையும்...
எருமைகள் கிழித்துக்கொண்டு போய்மறைந்த
கொஞ்ச நிமிடங்களில்
எதிரொலித்தபடி துரத்திக்கொண்டு வந்து
மனசில் குத்தி நின்றன.
தூரத்தே கேட்ட இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள்.

தவறுதலாக அழுத்தப்பட்ட விசைவில்லாகவோ
தங்களுக்குள் சுடுபட்ட மிருகங்களுடையதாகவோ
அல்லது
இருபது நாட்களுக்கு முன் காணாமல் போன
பள்ளிச் சீருடை மாணவன் மீது
கைகூப்பிய இறுதிக் கணங்களில்
நெற்றிப்பொட்டில் துளைக்கப்பட்டதாகவோ
இல்லை
கசக்கியெறியப்பட்ட ஒரு இளம்பெண்ணின்
மிச்சமிருக்கிற உயிரடக்கப் பிரயோகிக்கப்பட்டதாகவோ

இல்லாது போனால்...
மகனின் மணக்கோலம் பற்றிய
எனது கற்பனைகள் மீது
விழுந்த நெருப்பின் துளியாகவோ

எதுவாகவும் இருக்கக்கூடும்.
அந்த நடுச்சாமத்தின் அகாலஒலி.

பொலிஸார் தடியடி நடத்திக் கலைக்கிற
காணாமற் போனோர் ஊர்வலங்களுக்குள்
நான் தூக்கிப் பிடித்திருக்கிற
எனது மகனின் முகமும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கக் கூடும்.



அறியப்படாத
ஆயிரம் துப்பாக்கிச் சத்தங்களுக்கான
காரணங்களுக்குள்.

----xxx----


தீபிகா.
03-12-2011
06.43 A.m

* குறிப்பு - இலங்கையில், அந்நாட்டின் சிங்கள இராணுவத்தினராலும், அரச புலனாய்வுப்படைகளாலும், மற்றும் ஆயுதக்குழுக்களாலும் நடுஇரவுகளில் வெள்ளை வாகனங்களில் வந்து கடத்திச் செல்லப்பட்டு பின் காணாமல் போனவர்களின் தொகை ஆயிரக்கணக்கானவை. இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசுகள் வெளிப்படுத்தவில்லை.

* அனைத்துலக காணாமற்போனோர் தினம் - ஆவணி 30.