More than a Blog Aggregator

Dec 26, 2011

 நீராதேவி




நீராதேவி
யாருக்கும் சொந்தமில்லாதவள்.

நிறமில்லாமலிருக்கும் அவளிடம்
எந்த வாசனைகளுமில்லை.
சுவைகளும் இல்லை.

ஆனால்...
நிறங்களோடும்
வாசனைகளோடும்
சுவைகளோடும் வருகிற மனிதர்கள்
அவளை உறிஞ்சி இழுக்கிறார்கள்.

அவளோ பேதம் பார்க்காமல்
எல்லோருக்கும்
தன்னை பருகக் கொடுக்கிறாள்.
அவளை அள்ளுபவர்களும்
கிள்ளுபவர்களும் தான்
தங்களுக்குள் பேதம் பார்க்கிறார்கள்.

நீராதேவி பயணிக்கிறபோது
அவளை வழிமறித்து அணைக்கிறவர்கள்
தங்களுக்கென
அவளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அவளிடத்தில் தாகம் தணிப்பவர்கள்
அவள் யாருக்கென்ற போட்டியில்
தங்களுக்குள் உரசிக்கொண்டு
நெருப்பு மூட்டுகிறார்கள்.
இருபக்கமும் நின்று
மாறி மாறி கத்துகிறார்கள்.
பாதைகளை இழுத்து மூடிக்கொண்டு
பதாகைத் தடிகளால் அடிபடுகிறார்கள்.
இரத்தம் இறைக்கிறார்கள்.
பொங்கிக் குதிக்கிறார்கள்.

யாருக்கும்
உரித்துடையவள் ஆகமுடியா
நீராதேவி பொறுமையோடு இருக்கிறாள்.

எங்கள் எல்லோருக்கும்
நன்றாகவே தெரியும்.
அவள் பொங்கியெழுந்தால்
எப்படி இருக்குமென்று.

-----xxx------

தீபிகா.
22.12.2012
1.13 P.m


* 2004-12-26 - (சுனாமி நாள்)
* 2011-12-26 - ( 7ம் ஆண்டு நினைவு வலிநாள்)








Dec 22, 2011

மனசுக்குள் வளரும் ஆலமரம்




ஒற்றைக்கால் கொண்ட
பச்சைக் கம்பளக் கட்டிலாய்
விசாலித்திருக்கிற ஆலமரம்
பெருமைகள் நிறைந்துவழிய
தன் சாதனைச் சொற்களை
என் செவிகளுக்குள் திணித்தது.

தான்
வெயில் வாங்கி நிழல் கொடுப்பதாய்...
வேர்வைத்துளிகளை காய வைப்பதாய்...
மழைக்கு பெருங்குடை பிடிப்பதாய்...
குருவிக் குஞ்சுகளுக்கு பிரசவ விடுதியாயும்...
அணில்பிள்ளைகளுக்கு
விளையாட்டு மைதானமாயும்
இருப்பதாய் விலாசமடித்ததது.

வென்றதும் தோற்றதுமான
பல காதல்கள்
முதன்முதலில் தன் மேனியிலேயே
பதிவு பண்ணிக்கொண்டதாக
தழும்புகள் காட்டியது.

சிறுவர்கள் ஊஞ்சலாட
விழுதுகள் கொடுப்பதாயும்..
பெருசுகளிருந்து புகையிழுத்து விட
வேரடிகளை கொடுப்பதாயும்...
ஆச்சியொருத்தி கச்சான் விற்க
குளி்ர்மையான இடம் கொடுப்பதாயும்
சுய விளம்பரம்செய்தது.

தன் சாதனைகளை
சலசலத்துக் கொண்டிருந்த
ஆலமரத்தின் நிழலுக்கு கீழே
பறவை விழுத்திய எச்சத்துக்குள்ளிருந்து
முளைவிட்டு கருகிக் கொண்டிருந்த விதை
குற்றம் சாட்டியது.

ஆலமரம்
தனக்கு கீழிருக்கும் எதையும்
வளரவிடாது தடுப்பதாய்.


தீபிகா
02.12.2011
1.58 Pm.

Dec 20, 2011

எனது பிள்ளையின் காணி



போகவும் வரவும்
நான் பார்த்துக்கொண்டு போகிற
எனது பிள்ளையின் காணியை
இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
எனது பிள்ளையும்
அவனது நன்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.

பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.

எந்த உறுதிகளையும்
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.

அங்கே
எனது பிள்ளையும் அவனது நன்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.

எனது பிள்ளைகளுக்கான நேரத்தில்
ஆலயங்களெதிலும்
தீபம் காட்டி மணியடித்து
அர்ச்சனை செய்விக்கமுடியாதபடி
நான் வாழும் நிலத்தையும்
இவர்கள்
ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-------xxx----------



தீபிகா
29.11.2011
2.31 P.m

Dec 1, 2011

"விதைமண்ணிலிருந்து பேசும் ஆன்மாக்கள்”


நீங்கள்
தனித்தனியே விதைத்து வைத்த
எம் வித்துடல்களை கிளறியெறிந்து
மீண்டுமெம் ஆன்மாக்களை
மண்கும்பியாக்கி ஒன்று சேர்த்துவைத்திருக்கிறார்கள்
நம்மை வெறுப்பவர்கள்.

எமது மூச்சுக்களில் நிறைந்திருக்கும்
நமது கனவுகள்
மண்களினடியால் ஆழமாய் கீழிறங்குகின்றன.

நீங்கள்
எமக்காய் அன்று கொழுத்திவைத்த
சந்தனப்புகை வாசங்களும்
தூவிவி்ட்ட பூக்களின் நறுமணங்களும்
இன்னும்
நிறைந்திருக்கின்றன நம் மண்ணில்.

எம்மையும்
எமது விருப்பங்களையும் சேர்த்து
நெஞ்சில் சுமக்கும் சொந்தங்களே!
கட்டியெழுப்புங்கள்.
எமது கல்லறைகளை அல்ல.
நமது கனவுகளை.
விளக்கேற்றுங்கள்.
எமது விதைகுழிகளில் அல்ல.
எமது பெயரால் உமது மனதுகளில்.
ஆண்டுக்கொரு மரம் நடுங்கள்
உங்கள் வீட்டின் ஏதொவொரு ஓரத்தில்.
அதிலசையும் ஈரக்காற்றோடு
நாமும் உயிர்தொடுவோம்.

கார்த்திகை மாதத் திருநாளில்
எமை நினைத்துருகி
கண்மழை பொழியுமெம்
மண்மடி உறவுகளே!
எங்கள் யாவருக்குமாய்
நாமெம் இளமைகளை தொலைத்தோம்.
உறவு துறந்த பிரிவு சுமந்தோம்.
வலி தாங்கித் தாங்கி வாழ்ந்தோம்.
தேகமதில் வீரவடுப் பட்டோம்.
பின்னொரு நாளில்
நிறைவேறாத இலட்சியங்களோடு
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றன் பின் ஒன்றாய்
விதைகளாகிப் புதைந்தோம்.

எம் பிரிவின்
வலி சொல்லிச் சொல்லியழும்
ஈரமிகு நெஞ்சுகளே!
எமை தெரியாமலேயே
எமக்காய் கைகூப்பித் தொழும்
வீரமிகு பிஞ்சுகளே!
வாழுங்கள்.
எங்களுக்காய் வாழுங்கள்.
எமது கனவுகளுக்காய் போரிடுங்கள்.
நாம் கேட்கும் நீதிச் சுதந்திரம் பற்றி
தொடர்ந்து சொல்லுங்கள்.
எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை
மறுக்கப்படும் உரிமைகளை
சத்தமாக உரத்துக் கூறுங்கள்.

எமை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு
எங்களில் ஒருவராய்
நீங்கள் இருக்கிறீர்கள் எனும்
நம்பிக்கை கொடுங்கள்.
காலச்சறுக்கலில் சிறைப்பட்டுப் போன
எம் தோழர்களை
அங்கிருந்து வெளியே மீட்டெடுங்கள்.
மீண்டுவந்த காயப்பட்ட மனசுகளுக்கு
கருணை காட்டுங்கள்.
கை தூக்கி உயர்த்தி விடுங்கள்.

உறுப்பிழந்த உறவுகளுக்கு
ஊன்றுகோல்களாகி உதவுங்கள்.
இருள்சுமக்கும் நிலவுகளுக்கு
வாழ வழி காட்டுங்கள்.
யாரும் கேட்காமலேயே
ஒளிதரும் மின்மினியாய்
தேடிப்போய் வெளிச்சம் கொடுங்கள்.
ஆதரவற்றுப் போன தனிமரங்களுக்கு
நிழல் கொடுத்து அரவணையுங்கள்.

ஒற்றுமையாய் இருங்கள்.
எங்களின் பெயரால் ஒற்றுமையாயிருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாய்...
உங்கள் குழந்தைகளுக்கு
எம் தேசவரலாறு சொல்லிக்கொடுங்கள்.
எங்கெங்கு வாழ்ந்தாலும்
எம் தமிழ்மொழியை
கற்பித்துக் கொடுங்கள்.
நம்
தமிழை ...
தாய் நிலத்தை ...
பண்பாட்டை ...
எப்போதும் நேசிக்க கற்றுக் கொடுங்கள்.


நாமென்றும்
உங்களோடே இருப்போம்.
எங்கள் எல்லா சந்ததிகளோடும்.


------ xx -------

தீபிகா.
25.11.2011.
12.05am



Nov 29, 2011

மழை நனைத்த மனசு


பொழிந்து  தள்ளுகிறமழையில்
வழிந்து விழுகின்றன
ஞாபகத்துளிகள்.

தூறல் துளிகளை
முகம் நிமிர்த்தி ஏந்தும் சுகம்.
துரத்திவரும் தூவானங்களிலிருந்து
விலகிநிற்கும் சந்தோசம்.
கூரையின் வழி ஓடி வருகிற
உடையாத வெள்ளித்துளிக் கம்பிகளை
கை நீட்டி குறுக்கறுக்கிற மகிழ்ச்சி.
முதல் விழுகிற மழைத்துளிகளில்
வறுபடுகிற மண்ணின் வாசம்.
தரையில் விழுந்து அடிபட்டுக்கொண்டு
உடைகிற நீர்க்குமிழிகளின் கோலங்கள்.

தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு.
ஒழுகிற இடங்களை ஏந்திககொள்ளும் சட்டிகளில்
மழை பாடும் சங்கீதம்.
எம் கனவுக் கப்பல்களை காவிச்செல்லும்
அலையில்லா வெள்ளம்.
நெய்விளக்குகளுக்கு குடைபிடிக்க வைத்தபடி
எம்மோடு சேர்ந்தழும் கார்த்திகை மழை.

எல்லாம்
இப்போதும் ஈரமாகவே இருக்கிறது.
மழை நனைத்த என் மனசில்.


------xxx -------------

தீபிகா.
25.11.2011
8.13 Pm.
(அடைமழை பொழியும் முன்னிரவு)

Nov 27, 2011


"கனவுகள் நிறைந்த நிலங்கள்



கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற
வீரர்களது வித்துடல் நிலங்களில்
ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அந் நிலங்களை
நாம் கட்டித்தழுவ முடியாதபடி
கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.

விதைநிலங்களிலிருந்து வெடித்தெழும் கனவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாகி
அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

கனவுகள் படர்ந்திருக்கிற
வீரர்களின் பெயர்சுமந்த நடுகல்களுக்குள்ளால்
புகுந்து வருகிற காற்று
எங்களெல்லோரது சுவாசங்களுக்குள்ளும்
உள் நுழைகிறது.

அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த அழிக்கப்பட்ட வெளிநிலத்தின் மீது
எவரும் கட்டிப்போட முடியா நிலவு
தீபஒளி பொழிகிறது.

மறைக்கப்பட நினைக்கிற
வீரர்களின் துயிலிடங்களில்
காற்றின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உறங்கிக்கிடந்த உயிர்விதைகளின் கனவுகள் 
ஊர்களெங்கும் இரகசியமாய் நிறைந்திருக்கிறது.

ஆழிகளை தாண்டிக்கொண்டு 
இன்னுமின்னும் ஆழமாய் வேரூன்றுகின்றன.
அழிக்கப்பட நினைக்கும்
அவர்களின் வரலாறுகள்.

ஒரு கடல்சூழ் நிலத்தில்
கருத்தரித்த கனவுக்குழந்தையின்
பிரசவப் போராட்ட வலியின் ஓலம்
எல்லா மேசைகளிலும் எதிரொலிக்கிறது.

சத்தியச் சாவடைந்தவர்களின்
வரலாற்று நிலங்களெங்கும்
அள்ளிச் செல்லப்பட முடியா
நமது கனவுகள் நிறைந்திருக்கின்றன.

------xxx-----------


தீபிகா.
25.11.2011. 
6.58 Pm.

Nov 26, 2011


"உறங்குமிடங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்ட உயிர்முகங்கள்"



 ஒளிர்கிற சுடர்களுக்கு மேலாகவும்
பூக்களின் இடைவெளிகளாலும்
எங்களை நோக்கி
அவர்கள் மிதந்து வருகிறார்கள்.
 

உறங்குமிடங்களிலிருந்தும்
அகதிகளாக்கப்பட்டிருக்கின்ற
எம் இருப்பிடங்களுக்காக அணிவகுத்த
உயிர்முகங்கள்
தமது கனவுகளை காவியபடி
எம் சுவாசங்களுக்குள்
திரும்பவும் நிரம்பிக் கொள்கிறார்கள்.

எம் விழிகளில் தகிக்கும்
பிரிவுத் துளிகளால்
அவர்களை ஆறுதல் படுத்த முடியவில்லை.
அந்த இளமைமிகு முகங்கள்
எமக்கான தமது கனவுகள் பற்றியே
மீளவும் மீளவும் கதைக்கிறார்கள்.

அதற்காய்
தாம் கொடுத்த விலைகளையும்
சுமந்த வலிகளையும்
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

ஏக்கம் வழியும் விழிகளோடு
எமைப் பார்த்து புன்னகைக்கும்
அவர்களை
சொரிகின்ற பூக்களாலும்
ஒளிர்விக்கின்ற வெளிச்சங்களாலும்
வணங்க முடிகிறதே தவிர
திருப்திப்படுத்தவே முடியவில்லை.

தம் ஈரக் கனவுகளை
மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துவிட்டு
காத்திருப்பதாய் சொல்லிக்கொண்டு
ஊதுபத்தி புகைகளில் கரைந்தபடி
மேகங்கள் வரைக்கும் சென்று மறைகின்றன.
ஈகமாகிய அவர்களின் ஆன்மாக்கள்.
------ ------ -------


தீபிகா.
24.11.2011.
12.50 P.m







Nov 24, 2011

சிவப்பு அணக்கொண்டா

எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க?

பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?

என் கட்டளைகளெதற்கும் கட்டுப்படாமல்
உருண்டு திமிறி
வழுக்கிக்கொண்டு வெளியேறி
அதன் விசம்தடவிய
வார்த்தைகளின் வாலினை
காதுவழி வலிந்து செலுத்தி
முயற்குட்டி மனசுகளை
முழுதாய் விழுங்கி பின்னுமிழ்ந்து போட்டு
திரும்பிப்போய் பதுங்குகையில்
என் வாசங்களனைத்தும் நாற
நி்ர்வாணமாகி நிற்கிறேன்.

 பூவினிதழ்களுக்கும்...
புறங்கைகளுக்கும்...
முத்தமிடும்
அதே குகையின் வாசல்வழியாகத் தான்
அது
மனசுகளுக்கு குறிவைக்கின்றது.

காலத்தின் வாயின்வழி தெறித்துவிழும்
தீயின் சொற்களை ஞாபகக்காற்று தழுவிட
தீய்ந்து எரிகிற வலியில்
ஊதிப்பெருக்கிறது சினம்.

கோபங்கள் சன்னதம் கொள்கிற
அருவருக்கத்தக்க கணங்களில்
என்னத்தனை எலும்புகளையும்
தோற்கடித்துக்கொண்டு வென்றுவிடுகிறது
எலும்பில்லா சிவந்த சதைத்துண்டொன்று.

அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளை
சில மன்னிப்புக்களும்...
பல மௌனங்களும்...
அவ்வப்போது ஊதியணைத்து விடுகின்றன.

இருந்தாலும்... ...

என் வார்த்தைகளை பறித்தெடுத்து
ஆழமாய் அத்திவாரமிடப்பட்ட
முப்பத்திரெண்டு காவலரண்களையும்
உடைத்துக்கொண்டு
இதழ்வாசல் வழி அவற்றை வெளியெறியும்
இந்த சிவப்பு அணகொண்டாவை
எந்த பெட்டிக்குள் எத்தனை பூட்டுக்கொண்டு
பூட்டி வைப்பேன்?




தீபிகா
27-06-2010

நன்றி - முகமறியா புகைப்பட கலைஞருக்கு.

Nov 7, 2011

“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"



“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"









உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.

நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்.
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்.

இன்று

நீயில்லாத வெறுமைகளோடு
நானும் அம்மாவும்
முகம் பார்த்தபடி மௌனமாக இருக்கிறோம்.

இத்தனை நாள்
பிரார்த்தனைகளிலும்... ...
விரதங்களிலும்... ...
இளைத்துப் போய்க்கிடந்த அம்மா
கப்பலிலோ அல்லது களவாயோ
நீ பத்திரமாய் போய்ச்சேர்ந்து விட்டாய்
என்கிற மகிழ்ச்சியில்
சற்று பூரித்திருக்கிறாள் இப்போ.

அப்பா!
புரியவில்லையப்பா எனக்கொன்றும்.
புரியும் வயதும் இல்லையப்பா.

நான் எதிர்பார்த்திராத கணமொன்றில்
நேற்று நீ
திடீரென கணிணியில் தெரிந்தாய்.
கை காட்டினாய். சிரித்தாய்.
கதை கேட்டாய். கண் கலங்கினாய்.
பின்னர்
ஒரு கடவுளைப் போல
”bye” சொல்லிக்கொண்டு திடீரென்று
மறைந்து போனாய்.

என்னால்
கதைக்கவே முடியவில்லையப்பா.
மிக்கி மவுஸையும், டோரா பூச்சியையும்
பார்த்துச் சிரிக்கிற அதே திரைக்குள்
உன்னை பார்க்கிறபோது அழுகை வருகிறதப்பா.

எப்ப வருவீங்களப்பா?
என்ற என் மௌனமுடைத்த
ஒற்றைக் கேள்விக்கு
”நீங்க தான் செல்லம் இங்கை வரவேணுமென்றீர்கள்”

எப்போது? எப்படி?
என்று சொல்லவே இல்லையப்பா.

இப்போதெல்லாம்...
அம்மாவும் நானுமாய்
அடிக்கடி உங்களோடு கதைக்கிறோம்.
கண் கலங்குகின்றோம்.
பறக்கும் முத்தங்கள் பரிமாறுகிறோம்.
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கிறீர்கள்.
பாடிக் காட்டுகிறேன்.
புதுச்சட்டை போட்டுவந்து காட்டுகிறேன்.
நான் வாய்க்குள் வைத்து
எச்சிற்படுத்திய ஈரஇனிப்பை
உங்களுக்கு ஊட்டுவதற்காய்
கணிணித் திரையில் முட்டுகிறேன்.
நீங்களோ
விழுங்கிக் கொள்ளமுடியாமல்
விரக்தி கலந்து சிரிக்கிறீர்கள்.
என்ன வேணும் பிள்ளைக்கு?”
என்று நீங்கள் கேட்கிறபோது
மௌனம் போர்த்து விம்முகிறேன் நான்.

உங்களுக்கு புரியுமப்பா
என் மௌனத்தின் சத்தம்.

எந்தன் குட்டி மனசுக்குள்ளும்...
எந்த குறைகளுமில்லாமல்
எனை வளர்க்கிற அம்மாவின் மனசுக்குள்ளும்...
எப்போதும்
ஒன்றாகவே துடித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கண்ணீர்க் கேள்வி.

எப்போது
உங்களோடு எமை சேர்க்கப்போகிறது?
எமது விதியும்-காலமும்.


*** முற்றும் ***



தீபிகா.
14.08.2010.


09.20 pm

Oct 1, 2011

ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்


ஊர் பார்த்துவந்த வார்த்தைகள்



சேர்த்து சேர்த்து வைத்த
மகரந்தத் துளிகளை
அள்ளிக்கொண்டு போகின்றன
தெற்கிலிருந்து வரும் கரடிகள்.

புற்றுகளிலிருந்து வெளிச்செல்ல
அனுமதிக்கப்பட்ட எறும்புகள்
சிதைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
விழுந்த வதைகளை
பொறுக்கிச் சென்று
புதிய கூடு கட்டியிருக்கின்றன.

தம் ராணியை
தொலைத்த தேனீக்கள்
விழிகளில் பயம் வழிய
வேதனைகளை சுமந்தபடி
கொஞ்சம் கொஞ்சமாய்
வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

நந்தவனங்கள் காடாகியிருக்கும்
நரக நகரங்களில்
பச்சைப் பாம்புகள்
அங்குமிங்கும் முறுக்குடன் நெளிகின்றன.

பற்றைகள் வளர்ந்திருக்கும்
உயிர்விதை நிலங்களை
கிளறி எறிந்துவிட்டிருக்கிறார்கள்
வக்கிரம் தீர்க்கும்
ரத்தவாச மனிதர்கள்.

ஊன்றுகோல்களை அருகில் வைத்துக்கொண்டு
இருந்தபடியே வரவேற்கும்
இளைஞர்களும்
தாடிகளுக்குள் முகம் புதைத்திருக்கும்
தந்தைமார்களும்
இன்னும் எழுதப்படாத
நிறைய உண்மைக்கதைகளை
வலியோடு சொல்கிறார்கள்.

நொருங்கிப் போயிருக்கும்
கல்வீட்டு முற்றங்களிலமர்ந்து
மண்வீடு கட்டி
விளையாடிக்கொண்டிருக்கும்
போர்க்கால குழந்தைகளிடம்
அவர்களின் அப்பா பற்றி
விசாரிக்காமலேயே வந்து விட்டது
பதில்களை தாங்கமுடியா மனசு.

வேலிகளில்லா வீடுகளுக்கு
காவலிருக்கும் ஓணான்கள் பற்றி
எவரும்
பெருமிதப்படவேயில்லை.

உருமறைப்பு உடைகளும்
அவற்றோடு ஒட்டியிருக்கும்
குருவிச்சை இலைகளும்
எவ்வளவுதான்
வாய் அகல புன்னகைத்தாலும்
பூதங்களாகவே தெரிவதாக
கண்களில் திகில் பரவ
சொல்கிறார்கள்
குழந்தைகளும்.
அவர்களின் தாய்மார்களும்.

தமக்கு
விதிக்கப்பட்டு விட்ட
சபிக்கப்பட்ட நாட்களுக்கு நடுவே
தம் குழந்தைகளை
கூட்டிச் செல்வது பற்றியே
எல்லோரும்
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தீபிகா.


07-09-2011
9.48am.

Sep 7, 2011


"பூதங்களும் எனது குழந்தைகளும்”












Sep 1, 2011


முருகா உனக்கே தூக்கா?
















முருகா! உன் பெயருடைய தமிழனுக்கு
முடிச்சுப்போட பார்க்கிறார்கள் தொண்டையிலே!
ஆறுபடை வீடுடைய உந்தன் தேசத்திலே - இந்த
அநியாயம் நடந்திடுமா நம் கண்முன்னாலே.

காந்தியை காசுகளில் அடித்து வைத்தோம்.-அதை
கவனமாக பேசுகளில் எடுத்து வைத்தோம்.
காந்திவழி காதவழி கூட இல்லை - அது
காலாவதி ஆயிற்றென்றால் பொய்யுமில்லை.

அமைதி காக்கப் போனபடை அங்கு
அநீதி செய்தது. அசிங்கங்களும் கூடவது
அரங்கேற்றம் செய்தது. - ஆனாலும்
பிரதமரை கொன்றது குற்றம்.


அம்புகளோ கைகளிலே அகப்படவில்லை.
எய்தவரும் இறுதிவரை பிடிபடவில்லை.
அப்பாவித் தமிழர் மட்டும் அடியுதைபட்டார்.
ஆண்டுகள் இருபதுக்கு சிறையினில் செத்தார்.

இருபது வருடமென்ன ஒன்றா? இரண்டா?
இத்தனை நாள் தண்டனைகள் போதாதா என்ன?
இப்போது ஆணையிட்டீர் தூக்கில் போட-உம்
இதயமென்ன இரக்கமில்லா வெற்றுக்கூடா?


அன்னாக்கு டெல்லியிலே கிடைத்த வெற்றி-எங்கள்
அண்ணாவின் பிள்ளைகட்கும் கிடைக்க வேண்டும்.
இன்னாளில் நீதி இங்கு செத்துப் போயின் - இனி
என்னாளும் மனிதஇனம் உய்த்துப் போகா.

செங்கொடிகள் தயவுசெய்து வீழவேண்டாம். -நாளை
செங்கோல்கள் உங்களால் தான் வாழவேண்டும்.
ஆறுகோடி தமிழர் வாழும் தமிழகத்தில் - என்றும்
உயிர்க்கொடிகள் வீணாய் வாடிப் போகவேண்டாம்.


முற்றும்


* அன்னா ஹசாரே -
     ஜன் லோக்பால் மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருந்தவர்.
* செங்கொடி - முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்துச் செய்யவேண்டி
    தீக்குளித்து மாண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதேயான யுவதி.


”இயற்கையை தவிர வேறு யார் மரணத்தை ஏற்பாடு செய்தாலும் அது கொலை தான்.”



நன்றி - ஓவியர் (பொங்குதமிழ்)

Apr 5, 2011


மாறியிருக்கிற ஊரும்...
மீதியிருக்கிற உறவும்...


அரைவயிறு உணவுகளோடும்
அடையாள இலக்கங்களோடுமிருந்த
அகதி வாழ்வை முடித்துக்கொண்டு
நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம்.
அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

துப்பாக்கிகளை பிடித்தபடி
மேய்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
சிங்கள இடைஞர்கள்.
ஒட்டிய வயிறுகளோடு சோர்ந்து போயிருக்கிற
மீட்பர்களை தொலைத்த மந்தைகளை.

எங்களின் கடற்கரையில் நின்று
நாங்கள்
பார்த்துக்கொண்டு நிற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம்.
எவரெவரோ வந்து
மீன்பிடித்துப் போகிற காட்சிகளை.

இனிமேல்...

நாற்று நடவும்
ஞாயிற்றுக்கிழமை கூழ் காய்ச்சவும்
காற்றுப்போன சைக்கிள் ரியூப்பை
கழற்றி மாற்றவும்
கடலை வறுக்க வெளியே அடுப்பு மூட்டவும்
அழையா வருத்தாளிகளிடம் அனுமதி பெறவேண்டுமாம்.

பற்றை வளர்ந்திருக்கிற
விளையாட்டு மைதானத்தின் வாசலிலமர்ந்து
ஏதோ பேசிக்கொண்டிருக்கிற
எங்கள் கிராமத்தின்
உதைபந்தாட்ட இளைஞர்களுக்கு அருகே
அழுதுகொண்டிருக்கின்றன
அவர்களின் ஊன்றுகோல்கள்.

நாங்களில்லாத நாட்களின் வெறுமைகளில்
தங்களை அள்ளி நிரப்பிக்கொண்டவர்கள்
இப்போ
எங்கள் மொழியையும் கொலை செய்துகொண்டு
வேலியில்லா முற்றங்களில் வந்து நிற்கிறார்கள்.
மீதி சில்லறைகளையும் கொள்ளையடித்துப்போக.

அவர்களின் பிடிகளிலிருந்து நழுவிய
மீதிக் கால்நடைகள்
எங்கள் வாசம் நுகர்ந்துகொண்டு
மீண்டும் பட்டி திரும்புகின்றன.

சந்தி மதில்களில் சிரித்துக் கொண்டிருந்த
எம் விதைமுகங்களின் மீது
விசிறியிருக்கிற கறுப்புமைகளின் வழி
கசிந்துகொண்டிருக்கின்றன
எங்கள் கனவுகள்.

யுத்தம் தின்றுவிட்டுப் போட்ட மிச்சங்களுக்குள்
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
செத்துப்போன உறவுகளின்
ஞாபகங்களுக்காய் பத்திரப்படுத்த
அவர்கள் பாவித்த
ஏதேனுமொன்றின் எச்சங்களையேனும்.

மாறியிருக்கிற எம் ஊரில்
மீதியிருக்கிற உறவுகளின்
பாதியிருக்கிற மனசையேனும்
நீதியிருக்கிற நாடுகளும்
நாதியிருக்கிற மனிதர்களும்
காப்பாற்றித் தர மாட்டீர்களா?

*** முற்றும் ***


26.07.2010
03.43 pm