More than a Blog Aggregator

Nov 29, 2011

மழை நனைத்த மனசு


பொழிந்து  தள்ளுகிறமழையில்
வழிந்து விழுகின்றன
ஞாபகத்துளிகள்.

தூறல் துளிகளை
முகம் நிமிர்த்தி ஏந்தும் சுகம்.
துரத்திவரும் தூவானங்களிலிருந்து
விலகிநிற்கும் சந்தோசம்.
கூரையின் வழி ஓடி வருகிற
உடையாத வெள்ளித்துளிக் கம்பிகளை
கை நீட்டி குறுக்கறுக்கிற மகிழ்ச்சி.
முதல் விழுகிற மழைத்துளிகளில்
வறுபடுகிற மண்ணின் வாசம்.
தரையில் விழுந்து அடிபட்டுக்கொண்டு
உடைகிற நீர்க்குமிழிகளின் கோலங்கள்.

தூரத்தே துரத்திக்கொண்டு வருகிற
மழையின் சத்தம்.
ஓடுகிற மழையின் ஒருகோடி அழகு.
ஒழுகிற இடங்களை ஏந்திககொள்ளும் சட்டிகளில்
மழை பாடும் சங்கீதம்.
எம் கனவுக் கப்பல்களை காவிச்செல்லும்
அலையில்லா வெள்ளம்.
நெய்விளக்குகளுக்கு குடைபிடிக்க வைத்தபடி
எம்மோடு சேர்ந்தழும் கார்த்திகை மழை.

எல்லாம்
இப்போதும் ஈரமாகவே இருக்கிறது.
மழை நனைத்த என் மனசில்.


------xxx -------------

தீபிகா.
25.11.2011
8.13 Pm.
(அடைமழை பொழியும் முன்னிரவு)

Nov 27, 2011


"கனவுகள் நிறைந்த நிலங்கள்



கல்லறையுண்ணிகள் புரட்டிப் போட்டிருக்கின்ற
வீரர்களது வித்துடல் நிலங்களில்
ஆடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அந் நிலங்களை
நாம் கட்டித்தழுவ முடியாதபடி
கழுகுகள் கண் பதித்திருக்கின்றன.

விதைநிலங்களிலிருந்து வெடித்தெழும் கனவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாகி
அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

கனவுகள் படர்ந்திருக்கிற
வீரர்களின் பெயர்சுமந்த நடுகல்களுக்குள்ளால்
புகுந்து வருகிற காற்று
எங்களெல்லோரது சுவாசங்களுக்குள்ளும்
உள் நுழைகிறது.

அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அந்த அழிக்கப்பட்ட வெளிநிலத்தின் மீது
எவரும் கட்டிப்போட முடியா நிலவு
தீபஒளி பொழிகிறது.

மறைக்கப்பட நினைக்கிற
வீரர்களின் துயிலிடங்களில்
காற்றின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உறங்கிக்கிடந்த உயிர்விதைகளின் கனவுகள் 
ஊர்களெங்கும் இரகசியமாய் நிறைந்திருக்கிறது.

ஆழிகளை தாண்டிக்கொண்டு 
இன்னுமின்னும் ஆழமாய் வேரூன்றுகின்றன.
அழிக்கப்பட நினைக்கும்
அவர்களின் வரலாறுகள்.

ஒரு கடல்சூழ் நிலத்தில்
கருத்தரித்த கனவுக்குழந்தையின்
பிரசவப் போராட்ட வலியின் ஓலம்
எல்லா மேசைகளிலும் எதிரொலிக்கிறது.

சத்தியச் சாவடைந்தவர்களின்
வரலாற்று நிலங்களெங்கும்
அள்ளிச் செல்லப்பட முடியா
நமது கனவுகள் நிறைந்திருக்கின்றன.

------xxx-----------


தீபிகா.
25.11.2011. 
6.58 Pm.

Nov 26, 2011


"உறங்குமிடங்களிலிருந்து அகதிகளாக்கப்பட்ட உயிர்முகங்கள்"



 ஒளிர்கிற சுடர்களுக்கு மேலாகவும்
பூக்களின் இடைவெளிகளாலும்
எங்களை நோக்கி
அவர்கள் மிதந்து வருகிறார்கள்.
 

உறங்குமிடங்களிலிருந்தும்
அகதிகளாக்கப்பட்டிருக்கின்ற
எம் இருப்பிடங்களுக்காக அணிவகுத்த
உயிர்முகங்கள்
தமது கனவுகளை காவியபடி
எம் சுவாசங்களுக்குள்
திரும்பவும் நிரம்பிக் கொள்கிறார்கள்.

எம் விழிகளில் தகிக்கும்
பிரிவுத் துளிகளால்
அவர்களை ஆறுதல் படுத்த முடியவில்லை.
அந்த இளமைமிகு முகங்கள்
எமக்கான தமது கனவுகள் பற்றியே
மீளவும் மீளவும் கதைக்கிறார்கள்.

அதற்காய்
தாம் கொடுத்த விலைகளையும்
சுமந்த வலிகளையும்
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

ஏக்கம் வழியும் விழிகளோடு
எமைப் பார்த்து புன்னகைக்கும்
அவர்களை
சொரிகின்ற பூக்களாலும்
ஒளிர்விக்கின்ற வெளிச்சங்களாலும்
வணங்க முடிகிறதே தவிர
திருப்திப்படுத்தவே முடியவில்லை.

தம் ஈரக் கனவுகளை
மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துவிட்டு
காத்திருப்பதாய் சொல்லிக்கொண்டு
ஊதுபத்தி புகைகளில் கரைந்தபடி
மேகங்கள் வரைக்கும் சென்று மறைகின்றன.
ஈகமாகிய அவர்களின் ஆன்மாக்கள்.
------ ------ -------


தீபிகா.
24.11.2011.
12.50 P.m







Nov 24, 2011

சிவப்பு அணக்கொண்டா

எங்கே?
கொண்டுபோய் ஒளித்துவைக்க?

பலவேளைகளில்
சங்கீதம் பாடிக்கொண்டு
சிலவேளைகளில்
மிளகாய்த்தூளினை விசிறிவிடுகிற
இதனை எப்படி திருத்துவேன்?

என் கட்டளைகளெதற்கும் கட்டுப்படாமல்
உருண்டு திமிறி
வழுக்கிக்கொண்டு வெளியேறி
அதன் விசம்தடவிய
வார்த்தைகளின் வாலினை
காதுவழி வலிந்து செலுத்தி
முயற்குட்டி மனசுகளை
முழுதாய் விழுங்கி பின்னுமிழ்ந்து போட்டு
திரும்பிப்போய் பதுங்குகையில்
என் வாசங்களனைத்தும் நாற
நி்ர்வாணமாகி நிற்கிறேன்.

 பூவினிதழ்களுக்கும்...
புறங்கைகளுக்கும்...
முத்தமிடும்
அதே குகையின் வாசல்வழியாகத் தான்
அது
மனசுகளுக்கு குறிவைக்கின்றது.

காலத்தின் வாயின்வழி தெறித்துவிழும்
தீயின் சொற்களை ஞாபகக்காற்று தழுவிட
தீய்ந்து எரிகிற வலியில்
ஊதிப்பெருக்கிறது சினம்.

கோபங்கள் சன்னதம் கொள்கிற
அருவருக்கத்தக்க கணங்களில்
என்னத்தனை எலும்புகளையும்
தோற்கடித்துக்கொண்டு வென்றுவிடுகிறது
எலும்பில்லா சிவந்த சதைத்துண்டொன்று.

அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளை
சில மன்னிப்புக்களும்...
பல மௌனங்களும்...
அவ்வப்போது ஊதியணைத்து விடுகின்றன.

இருந்தாலும்... ...

என் வார்த்தைகளை பறித்தெடுத்து
ஆழமாய் அத்திவாரமிடப்பட்ட
முப்பத்திரெண்டு காவலரண்களையும்
உடைத்துக்கொண்டு
இதழ்வாசல் வழி அவற்றை வெளியெறியும்
இந்த சிவப்பு அணகொண்டாவை
எந்த பெட்டிக்குள் எத்தனை பூட்டுக்கொண்டு
பூட்டி வைப்பேன்?




தீபிகா
27-06-2010

நன்றி - முகமறியா புகைப்பட கலைஞருக்கு.

Nov 7, 2011

“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"



“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"









உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.

நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்.
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்.

இன்று

நீயில்லாத வெறுமைகளோடு
நானும் அம்மாவும்
முகம் பார்த்தபடி மௌனமாக இருக்கிறோம்.

இத்தனை நாள்
பிரார்த்தனைகளிலும்... ...
விரதங்களிலும்... ...
இளைத்துப் போய்க்கிடந்த அம்மா
கப்பலிலோ அல்லது களவாயோ
நீ பத்திரமாய் போய்ச்சேர்ந்து விட்டாய்
என்கிற மகிழ்ச்சியில்
சற்று பூரித்திருக்கிறாள் இப்போ.

அப்பா!
புரியவில்லையப்பா எனக்கொன்றும்.
புரியும் வயதும் இல்லையப்பா.

நான் எதிர்பார்த்திராத கணமொன்றில்
நேற்று நீ
திடீரென கணிணியில் தெரிந்தாய்.
கை காட்டினாய். சிரித்தாய்.
கதை கேட்டாய். கண் கலங்கினாய்.
பின்னர்
ஒரு கடவுளைப் போல
”bye” சொல்லிக்கொண்டு திடீரென்று
மறைந்து போனாய்.

என்னால்
கதைக்கவே முடியவில்லையப்பா.
மிக்கி மவுஸையும், டோரா பூச்சியையும்
பார்த்துச் சிரிக்கிற அதே திரைக்குள்
உன்னை பார்க்கிறபோது அழுகை வருகிறதப்பா.

எப்ப வருவீங்களப்பா?
என்ற என் மௌனமுடைத்த
ஒற்றைக் கேள்விக்கு
”நீங்க தான் செல்லம் இங்கை வரவேணுமென்றீர்கள்”

எப்போது? எப்படி?
என்று சொல்லவே இல்லையப்பா.

இப்போதெல்லாம்...
அம்மாவும் நானுமாய்
அடிக்கடி உங்களோடு கதைக்கிறோம்.
கண் கலங்குகின்றோம்.
பறக்கும் முத்தங்கள் பரிமாறுகிறோம்.
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கிறீர்கள்.
பாடிக் காட்டுகிறேன்.
புதுச்சட்டை போட்டுவந்து காட்டுகிறேன்.
நான் வாய்க்குள் வைத்து
எச்சிற்படுத்திய ஈரஇனிப்பை
உங்களுக்கு ஊட்டுவதற்காய்
கணிணித் திரையில் முட்டுகிறேன்.
நீங்களோ
விழுங்கிக் கொள்ளமுடியாமல்
விரக்தி கலந்து சிரிக்கிறீர்கள்.
என்ன வேணும் பிள்ளைக்கு?”
என்று நீங்கள் கேட்கிறபோது
மௌனம் போர்த்து விம்முகிறேன் நான்.

உங்களுக்கு புரியுமப்பா
என் மௌனத்தின் சத்தம்.

எந்தன் குட்டி மனசுக்குள்ளும்...
எந்த குறைகளுமில்லாமல்
எனை வளர்க்கிற அம்மாவின் மனசுக்குள்ளும்...
எப்போதும்
ஒன்றாகவே துடித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கண்ணீர்க் கேள்வி.

எப்போது
உங்களோடு எமை சேர்க்கப்போகிறது?
எமது விதியும்-காலமும்.


*** முற்றும் ***



தீபிகா.
14.08.2010.


09.20 pm