More than a Blog Aggregator

May 21, 2013

என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்


என் பாலகத் தோழியும் மயிலிறகுகளும்



ஒரு காலத்தில்
எங்கள் நட்பின் பரிசுப்பொருளாய் இருந்தது
இந்த மயிலிறகுகள் தானே தோழி.

நீ என்னிடம் வாங்கிய கர்ப்பிணி மயிலிறகு
குட்டி போட்ட சந்தோசத்தை
பள்ளிக்கூடம் ஆரம்பித்த பிரார்த்தனைக் காலையில்
இரகசியமாய் காதுக்குள் ஓடிவந்து சொன்ன நிமிடங்களை
ஞாபகமிருக்கிறதா தோழி உனக்கு?

என் சைவப் புத்தகத்தில் முருகன் வைத்திருந்த
அதே மயில் படத்தின் பக்கத்துக்குள்
பென்சில்பூ தீட்டி தீட்டி போட்டு வளர்த்த
என் மயிற்குஞ்சுகளை
உனக்கின்னும் ஞாபகமிருக்கிறதா தோழி ?

சூரிய ஒளிபட்டு என் குஞ்சு மயிலிறகுகள்
கறுத்துப் போய்விடுமென்று
உன்னை என்னருகே அழைத்து
எம் முகங்கள் உரசிக்கொள்ள
மெதுவாய் திறந்து காட்டிய
என் மயிற்குஞ்சுகளை
இப்போதுமுனக்கு ஞாபகமிருக்கிறதா தோழி.

என் பென்சில் சீக்கிரம் முடிகிற இரகசியத்தை
அப்பா கண்டுபிடித்து அடித்தபோது
விழுந்த தழும்பை
உன்னிடம் வந்து விம்மியபடி காட்டிய போது
மெதுவாய் என் உள்ளங்கை தடவி கண்கலங்கினாயே நீ.
ஞாபகமிருக்கிறதா தோழி.

குட்டிபோட்ட பின் திருப்பித் தருவதாய்
நீ என்னிடம்
கடைசியாய் கடன்வாங்கிய
பொன்னிறம் மின்னும் நீள மயிலிறகை
நீயும் தொலைத்து விட்டாயா தோழி?

இப்போது எனக்காய்.... ....

மயிலிறகுகளும் இல்லை.
நீயும் இல்லை.
பள்ளிக்கூடமும் இல்லை.

நான் மட்டும் தனியே இருந்து
அழுது கொண்டிருக்கிறேன் தோழி.


---xxx----

தீபிகா
19-05-2013
6.31 P.m

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல நினைவுகளை மீட்டியது... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

குட்டிபோட்ட பின் திருப்பித் தருவதாய்
நீ என்னிடம்
கடைசியாய் கடன்வாங்கிய
பொன்னிறம் மின்னும் நீள மயிலிறகை
நீயும் தொலைத்து விட்டாயா தோழி?

மயிலிறகாய் மலரும் நினைவுகள்..!

Post a Comment