More than a Blog Aggregator

May 26, 2013

சௌந்தர்யக் குரல் அழகா!

சௌந்தர்யக் குரல் அழகா! 
(இரங்கற்பா)




சௌந்தர்யக் குரல் அழகா!
எங்கள்
சந்தனத் தமிழ்க் குரலா!
சாத்திக் கொண்டாயோ உன் விழிக்கதவை.

கம்பீரக் குரல் வேந்தா!
எங்கள்
கன்னித் தமிழை கணீர்க் குரலில்
கூவித் திரிந்த குயில் மொழியா!
கூடுவிட்டுப் போனதுவோ உன் ஆன்மா!

பட்டை தீட்டிய பெரு நெற்றியும்
பதித்து வைத்த சந்தனப் பொட்டழகும்
சிவந்து மிளிரும் செங் குங்குமமும்
தரித்து நீ மேடை வந்தால்
தமிழே அழகு பெறும்.
சிலையாய் இருக்கின்ற
கலைத்தாயே எழுந்து வந்து
கவிபாடும் தோற்றம் பெறும்.

உன்நாவில் தமிழ் ஒலித்தால்
உச்சரிப்பு அழகொளிரும்.
உணர்வுடன் நீ பாடுகையில்
உள்ளங்கள் உருகி நிற்கும்.

முருகா... என்று நீ
அழைத்துப் பாடுகையில்
அருகே கடவுள் வந்தது போலிருக்கும்.
ஆயிரம் தடவை கேட்கலாம் எனத்தோன்றும்.

எழிலிசை வேந்தா!
எட்டாத குரல் மொழியா!
நீ மெட்டெடுத்து பாடுகையில்
மேதினியே அமைதி பெறும்

காந்தர்வக் குரல் குயிலா! 
கர்வமில்லா சிரிப்பழகா! 
நாப்பது ஆண்டுகளாய்
நம் தமிழை இசைத்த - தமிழ்
நாக்குடைய பெருமனிதா!

ராதா என்னை விட்டு ஓடாதேடி...
நாதா! நீ பாடிய முதல் பாடல் அது.
சாதான் உன்னுடலை பிரித்தது. - எம்மோடு
நீதான் குரலால் நீக்கமற நிறைந்திருப்பாய் போ.

கற்பனை என்றாலும்..கற்சிலை என்றாலும்...
கற்கண்டு குழைத்த தமிழ்க் குரலில் 
நீ பாடினால் கண்ணில் நீரொழுகும்.
உள்ளம் உருகுதய்யா நீ உச்சரித்தால்
இன்றும் உயிர் உருகி கரைந்தோடும்.

பொன்னகை அணிந்து மேடைகளில் ஜொலித்தவரே!
உங்கள்
புன்னகை அதைக் காட்டிலும்
ஆயிரம் அழகு பெறும் தெரியுமா?

வாலியை அழைத்து வந்து தந்து
வண்ணத் தமிழுக்கு வளம் சேர்த்தவர் நீங்கள்.
வசந்த மாளிகையில் யாருக்காக? பாடிய
வண்ணக் குரலுக்கு சொந்தக்காரா!

நீ அழுது பாடினால்...
நாங்களும் அழுதோம்.
நீ சிரித்துப் பாடினால்
நாங்களும் சிரித்தோம்.
உன்குரல் சொன்ன தத்துவங்களை
எங்கள் வாழ்வின் வேதங்களாய் சுமந்தோம்.

எந்தப் பெருமைகளும் இல்லாது
நீ தொலைக்காட்சிகளில் வந்திருப்பாய்.
வலிக்காமல் வார்த்தை சொல்வாய்.
குழந்தை கலைஞரோடு குழந்தையாகி நீ மகிழ்வாய்.
தட்டிக் கொடுத்துநீ தவறாமல் பாராட்டுவாய்.

கண்ணதாசன் எழுதிய
கடவுள் சாகவேண்டும்
என்ற வரியை
பாடமறுத்த கொள்கைக் காரா!
உன் தீர்க்கமான பிடிவாதத்தால்
வாடவேண்டும் என்று மாற்றித் தந்தாராமே
அந்த வரலாற்றுக் கவிஞன்.

நீ இருப்பாய். நிலைத்திருப்பாய்.
எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பாய்.

உன் குரல் உலகெங்கும்
தினம் உச்சரித்தபடி தானிருக்கும்.
உன் பாடல் இல்லாத நாளொன்று
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் விடியாது.

போய்வா குயிலே போய்வா.
நீ கும்பிட்ட இளங்குமரன் கூப்பிட்டுப் போகிறாய்.
போய்வா. இசையே போய்வா.

உன் பாடல்களில்
சங்கீதம் உன்னைச் சுமந்து செல்லும்.
உன் உச்சரிப்பில்
தமிழ் உன்னை நினைந்து கொள்ளும். 




----xxx-----

தீபிகா
25-05-2013
06.35 P.m



4 comments:

Unknown said...

மறைந்தும் மறையா மாமனிதர்! அவர்! இவ்வுலகம் உள்ளவரை வாழ்வார்! இரங்கள் கவிதை அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

இளம்பரிதியன் said...

அருமை உங்கள் வரிகள் ..... வாழ்வார் இசையாய்த் தமிழாய்.....அமரர்கள் தமிழில் சிலர்... அவருள் இவரும் ஒருவரன்றோ........

கீதமஞ்சரி said...

இரங்கற்பாவெனும் இனிய புகழாரம்... எத்தனை ஆண்டுகளானாலும் சுவாசிக்கும் காற்றில் கலந்துவரும் அவர் கானம்! ஐயாவின் புகழ்பாடும் கவிதை மனந்தொட்டது தீபிகா.

Post a Comment