More than a Blog Aggregator

May 29, 2013

துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது



துணைக்கு யாருமற்றவனின் இரவுப் பொழுது


மெனனப் பின்னிரவில்
அனுமதியின்றி யன்னல் புகுந்து விழும்
அறைச்சுவரின் நிலவொளியில்
விட்டுவிட்டு நடனமாடுகின்றன
கறுப்புத் தென்னங் கீற்றுக்கள்.


தூரத்துத் தெருவொன்றிலிருந்து
பயங்கரமாய் வந்து சேர்கிறது
நாய்களின் நள்ளிரவு ஆலாபனை.

முழுதாய் திருகி முடிக்காத
தண்ணீர்க் குழாயின் கண்ணீர்த் துளியை
சத்தமாய் ஏந்திக் கொள்கிறது வெறும்வாளி.

கண்ணாமூச்சி விளையாட்டில்
இன்னுமென்னிடம் பிடிபடாதிருக்கின்ற
கரப்பான் பூச்சியொன்று
கைகளை சுரண்டிவிட்டு ஓடுகிறது.

கூட்டை விட்டு வெளிக் கிளம்பி
என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாய்
கிட்டக் கிட்டக் கேட்கிறது
விநாடிக் கம்பியின் கர்ச்சிப்பு.

வெட்கம் மறந்து கதறுகிற
இரவுப் பெண்பூனை
பாலுக்கு வீரிட்டழுகிற ஒரு பஞ்சுக் குழந்தையை
என் கைகளில் தந்து விட்டு ஒளிகிறது.

மூலைச் சுவரோடிருக்கிற தென்னைமரம்
தன் வியர்வை அரிச்சலை
கூரை விளிம்பில் சுருதி பிசகாமல்
தேய்த்துக் கொண்டே இருக்கிறது.

சுவர் மேடையில் நடந்த
பல்லிகளுக்கான நள்ளிரவுக் குத்துச் சண்டையில்
எல்லைக் கோட்டைத் தாண்டி
என்னருகே “தொப்” என்ற சத்தத்துடன்
விழுந்த கிடக்கிறது ஒரு வீரப்பல்லி.

சுருதி விலகாத தாளக்கட்டுப்பாடு
பாடிக் கொண்டே போகிறது
நெடுந்தூரப் புகைவண்டி.

வானக் கிளையிலிருந்து
நட்சத்திரப் பூவொன்று
வேரை நோக்கி சிரித்துக்கொண்டு விழுகிறது.

பாம்பு ஊர்வதான பிரமையில்
போர்வையை வெடுக்கென உதறிவிட்டு
படபடக்கிறது கால்.

வலப்பக்கம் வைத்துவிட்டுப் படுத்த செல்பேசியை
இடப்பக்க படுக்கையெங்கும் தடவுகின்றன
தூக்கக் கைகள்.

அமைதியாய் ஊற்றுகிற ஒருமிடறு தண்ணீர்
தொண்டைக் குழியை
பேரிரைச்சலோடு கடப்பதாய்
செவிகள் அலறுகின்றன.

கொஞ்சம் பெய்யலாம் போல இருக்கிற
என் நீர்மழையையும்
விடாது அடக்கி வைத்திருக்கிறது
இரவுப் பயம்.


---xxx ---

தீபிகா.
25-05-2013
12.28 P.m







3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படித்தான் தோணும் போல...

தொடர வாழ்த்துக்க்கள்...

Seeni said...

ethaarthangal....


arumai...!

Yaathoramani.blogspot.com said...

கொஞ்சம் பெய்யலாம் போல இருக்கிற
என் நீர்மழையையும்
விடாது அடக்கி வைத்திருக்கிறது
இரவுப் பயம்.//

அருமை அருமை
நான் உணர்ந்த சொல்லத் தெரியாத
இரவின் தனிமையை ,பயத்தை
மிககச் சரியாக இக்கவிதையில்
அனுபவித்து மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள்

Post a Comment