More than a Blog Aggregator

Feb 21, 2011

 விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..




என் அப்பாவை  ஒளி(ழி)த்த குற்றத்துக்காக
அவர்களை நோக்கி வருகிற
தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்
நாக்குத் தொங்கச் சாகப்போகிற
தீர்ப்புக்களிடமிருந்து
தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக
தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு
உன் அப்பா
நேற்று உண்ணாவிரதமிருந்தார்.


கூடவே...நீயுமுன்
அப்பாவுக்காக சாப்பிடாமல்
அடம்பிடித்துக் கிடந்தாயாம்.


தோழியே!
மனதை தேற்றிக்கொள்.
ஒன்றிரென்டு நாள் பட்டினி கிடந்தாவது
உயிரோடிருக்கிற உன் அப்பாவை
வீடு கொண்டுவந்து சேர்க்க
உன்னால் முடிந்திருக்கிறது.


இங்கே...காணாமல் போகடிக்கப்பட்ட
என் அப்பாவைதேடிக்கொண்டேயல்லவா
நான் தினமும் உணவுக்கு வழியற்று
பட்டினியிருக்கிறேன்.


நேற்று
நானும்..தம்பியுமாய் சேர்ந்து
கருகிக்கிடக்கும் எம் வீட்டின் சாம்பலுக்குள்
கடைசிவரை தேடியும் கிடைக்கவேயில்லை.
உன்வயதே இருக்கும் எங்கள் அப்பாவின்
ஒரேயொரு புகைப்படமாவது.


அம்மாவின் பொட்டில்லாத நெற்றியையும்
சிரிப்பில்லாத உதட்டையும்
பார்க்க பார்க்க அழுகை வருகிறது.


உன் அப்பாவுக்கு
தவழ்ந்துவந்து யூஸ் கொடுக்கிற
உனது ஜனாதிபதி
எங்களுக்கு குளிப்பதற்கே நீரளந்து தருகிற
ஒரே நாட்டுக்குள் தான்
நானும் நீயும் இருக்கிறோம் தோழி.


சித்தார்த்தனின் மாளிகைக்குள்ளிருந்து
உனது கண்களால்
நான் திருவோடு ஏந்துகிற காட்சியை
நீ கண்டுகொள்ள முடியாது தான்.
எனினும்அப்பா இல்லாத வீட்டின்
வலிகளிலொரு துளியையேனும்
நீ அனுபவித்திருப்பதால் கேட்கிறேன்.
எனது ஏக்கம் உனக்கு புரிகிறதா?


சாரத்தை ஊஞ்சலாக்கிக் கொண்டு
நான் ஒளித்திருக்கிற என் அப்பாவின் மடியும்..
குலுங்கிக் குலுங்கி சிரிக்க
வானம் தூக்கியெறிந்து பிடிக்கும்
அப்பாவின் கரங்களும்..
உனக்கு கிடைத்தது போல
எனக்கும்
ஒருநாள் திரும்பக் கிடைத்துவிடாதா?




பாடசாலைகளுக்கு
சிறுவர்களை கைப்பிடித்து வரும்
உரோமமுள்ள கரங்களில்... ...
திருவிழாக்களில்
குழந்தைகளை தூக்கிவைத்திருக்கும்
புடைத்த தோள்மூட்டுக்களில்... ...
முன்னால் சிறு மொட்டை விழுந்திருக்கும்
தகப்பன்மாரின் தலைகளில்... ....
என் அப்பா வைத்திருந்த
அதே கறுப்புநிற மோட்டார்சைக்கிளில்
வீதியில் போய்வருவோர் முகங்களில்... ...
கிடைத்துவிடுமென்ற எதிர்பார்ப்புடன்
கண்கள் களைத்துப் போகும்வரை
நானின்னும் தேடிக்கொண்டே தானிருக்கிறேன்.


இப்போ
என் முதலெழுத்தோடு மட்டுமே மிஞ்சியிருக்கிற
என் அப்பாவை.


*** முற்றும் ***

தீபிகா
18.07.2010
09.27 pm

No comments:

Post a Comment