More than a Blog Aggregator

Dec 26, 2011

 நீராதேவி




நீராதேவி
யாருக்கும் சொந்தமில்லாதவள்.

நிறமில்லாமலிருக்கும் அவளிடம்
எந்த வாசனைகளுமில்லை.
சுவைகளும் இல்லை.

ஆனால்...
நிறங்களோடும்
வாசனைகளோடும்
சுவைகளோடும் வருகிற மனிதர்கள்
அவளை உறிஞ்சி இழுக்கிறார்கள்.

அவளோ பேதம் பார்க்காமல்
எல்லோருக்கும்
தன்னை பருகக் கொடுக்கிறாள்.
அவளை அள்ளுபவர்களும்
கிள்ளுபவர்களும் தான்
தங்களுக்குள் பேதம் பார்க்கிறார்கள்.

நீராதேவி பயணிக்கிறபோது
அவளை வழிமறித்து அணைக்கிறவர்கள்
தங்களுக்கென
அவளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அவளிடத்தில் தாகம் தணிப்பவர்கள்
அவள் யாருக்கென்ற போட்டியில்
தங்களுக்குள் உரசிக்கொண்டு
நெருப்பு மூட்டுகிறார்கள்.
இருபக்கமும் நின்று
மாறி மாறி கத்துகிறார்கள்.
பாதைகளை இழுத்து மூடிக்கொண்டு
பதாகைத் தடிகளால் அடிபடுகிறார்கள்.
இரத்தம் இறைக்கிறார்கள்.
பொங்கிக் குதிக்கிறார்கள்.

யாருக்கும்
உரித்துடையவள் ஆகமுடியா
நீராதேவி பொறுமையோடு இருக்கிறாள்.

எங்கள் எல்லோருக்கும்
நன்றாகவே தெரியும்.
அவள் பொங்கியெழுந்தால்
எப்படி இருக்குமென்று.

-----xxx------

தீபிகா.
22.12.2012
1.13 P.m


* 2004-12-26 - (சுனாமி நாள்)
* 2011-12-26 - ( 7ம் ஆண்டு நினைவு வலிநாள்)








14 comments:

Anonymous said...

தீபி முதலில் நம் மாநிலத்தில் உள்ள தற்போதைய
பிரச்சனைப் பற்றி சொல்கிறீர்கள் என நினைத்தேன்.
கடைசி வரி படித்ததும் தெளிவாகியது.
அருமையான படைப்பு. அவர்கள் ஆன்மா சாந்தி பெறட்டும்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரி,
தண்ணீரும் மூன்று முறை தான் பொறுக்கும் என்று சொல்லுவார்கள். இன்று சுனாமி நினைவாக நீராதேவிக்கு கோபம் ஏற்பட்டால் என்னாகும் என்பதனை நினைவூட்டல் கவிதையாகத் தந்திருக்கிறீங்க.

இசைப்பிரியனின் இசையில் அமைந்த பாடல் கவிக்கு வலுச் சேர்க்கிறது.

தீபிகா(Theepika) said...

இன்று தண்ணீருக்காக சண்டையிடுகிற சகோதரர்களுக்கு அன்றைய வலியை மீள ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறதன் வெளிப்பாடு இது.
தங்களிருவரது கருத்துக்களுக்கும் நன்றிகள் ஸ்வராணி,நிரூபன் சகோதரர்களே.

IsaiSelvan said...

நல்லா இருக்கு தொடரட்டும்.....

வேதகண்ணன் said...

உங்களுக்குள் இப்படி ஒரு உக்கிரமா? நீராதேவி அவர்களே........
http://vethakannan.blogspot.com/2011/12/blog-post_25.html

ம.தி.சுதா said...

///நீராதேவி////

நாங்களும் காதலித்தோம்
அவளும் காதலித்தாள்
முரட்டுக்கரத்தால் அணைத்த போது மட்டும்
தவித்து விட்டோம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

கீதமஞ்சரி said...

மனம் நெகிழ்த்தும் நிதர்சன வரிகள். நீராதேவி பெயர் மிக அருமையாக இருக்கிறது, சொல்லும்போதே அவளுடைய திண்மையும் இளக்கமும் இணைந்தே ஒலிக்கிறது.

சிறிய ஆலோசனை; பின்னூட்டமிடுமுன் வரும் வார்த்தைச் சரிபார்ப்பை நீக்கிவிட்டால் கருத்துரைக்க வருபவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். நன்றி.

தீபிகா(Theepika) said...

நன்றி கீதா. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். தங்கள் ஆலோசனையை நடைமுறைப்படுத்தியுள்ளேன்.

தீபிகா.

ஹேமா said...

தீபிகா...வணக்கம்.மனம் கனக்கும் வார்த்தைகளோடு அருமையான கவிதை.நீராதேவி புதிய சொல் அருமை.இனிய 2012ன் வாழ்த்துகள் சகோதரி !

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
நெருப்பு எரிந்தால் அணைக்க நீருண்டு
நீராதேவி பொங்கியெழுந்தால்
அழிந்து ஒழிந்து போவதைத் தவிர
வேறு வழியில்லை
நீங்கள் சொல்வது போல் அவளுடன் விளையாடாதிருப்பதே
மனித குலத்திற்கு நல்லது
த.ம 3

தீபிகா(Theepika) said...

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உற்சாகமளித்தமைக்கு கேமா மற்றும் றமணி ஆகியோருக்கும் நன்றிகள்.
தொடர்ந்தும் படியுங்கள்.

vetha (kovaikkavi) said...

''...ஆனால்...
நிறங்களோடும்
வாசனைகளோடும்
சுவைகளோடும் வருகிற மனிதர்கள்
அவளை உறிஞ்சி இழுக்கிறார்கள்...''
நல்ல கருத்துடைக் கவிதை சகோதரி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Unknown said...

"நன்றாகவே தெரியும்.
அவள் பொங்கியெழுந்தால்
எப்படி இருக்குமென்று."

இதை யோசிக்காமல் தானே இவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும்

தீபிகா(Theepika) said...

அனைவரின் கருத்துகளுக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் மனநிலைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் உணர்வுகளை.

Post a Comment