More than a Blog Aggregator

Jul 2, 2013

சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


சிறைவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்


எமது குழந்தைகள்
சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களறியா
அவர்களுக்கான சுதந்திரப் புல்வெளிகளில்
விளையாட ஆட்களற்று
வண்ணத்துப் பூச்சிகள் சோர்ந்து போயிருக்கின்றன.

ஒரு சிறிய தொட்டியறைக்குள்
சிறைவாழுமெம் குழந்தைகளுக்கு
நண்பர்களாக இருக்கிறார்கள்.
மிகச்சிறிய கண்ணாடித் தொட்டிக்குள்
அடைபட்டுக் கிடக்கும் வண்ணமீன்கள்.

விழித் திரைகள் ஒடுக்கப்பட்ட குழந்தைகள்
சிறையின் மின்சார வெளிச்சங்களில்
ஒளியற்று தனித்திருக்கிறார்கள்.

வெளியே
பாட்டுப்பாட குழந்தைகளில்லா நிலவு
அவர்களுக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.
மிக்கி மவுசையும், டோறாவையும் தவிர
வேறெதையும் அடையவிடாது தடுக்கிறது
அவர்களின் சிறையுலகு.

அவர்களொரு போதும்
ஒரு எறும்பின் வரிசையை
பின் தொடர்ந்து போனதேயில்லை
ஒரு மாமரக் குயிலுக்கு
பாட்டுச் சொல்லிக் கொடுத்ததுமில்லை.
வண்ணத்துப் பூச்சியொன்றின் மஞ்சளையேனும்
கைவிரல்களால் தீண்டிப் பார்த்ததும் கிடையாது.
ஒரு நாய்க்குட்டியின் வாலில்
ஈர்க்கால் அடித்து அழவைத்துப் பார்க்கவுமில்லை.

புத்தகப் பைகளை மட்டுமே சுமக்கும்
அவர்களின் முதுகுகள்
இதுவரையொரு போதும்
உப்புமூட்டை சுமந்து மகிழ்ந்ததேயில்லை.

கூட்டுக் கோழிகளாய் ஒடுக்கியிருக்கின்ற
மண்படாக் குழந்தைகளின் கால்கள்
மழையைப் பார்த்து அஞ்சுகின்றன.
ஒரு மாடு புல்லுண்பதைக் கூட
குழந்தைகள் டிஸ்கவரி அலைவரிசையில்
அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கடலின் ஓவியத்தை
அலைகளைப் பார்த்திரா குழந்தை விழிகள்
ரசிக்க முடியாமல் திருப்பி விடுகின்றன.

கொக்கக் கோலாவை உறிஞ்சியிழுக்கிற
அவர்களின் பிஞ்சு உதடுகள்
வழுக்கல் செவ்விளநீரை
அலட்சியத்தோடு நிராகரிக்கின்றன.
தேங்காய்ப்பூ குழல் புட்டை
தொட்டுப் பார்க்காமலேயே ஒதுக்குகின்ற
அவர்களின் அவசர வயிறுகள்
நூடில்சுக்குள் சிக்குண்டு கிடக்கின்றன.
பனங்கிழங்கின் சுவையறியா
குழந்தைகளின் பற்களுக்கிடையில்
கொழுவுண்டு கிடக்கிறது லாலிப் பொப்

ஒரு சுண்டெலியைப் பிடித்தபடி
அவர்கள் சவாரிப் போட்டி செய்கிறார்கள்.
சமர்க்களங்களில் போர் புரிகிறார்கள்.
சாப்பாட்டுக் கடை நடத்துகிறார்கள்.
இன்னுமின்னும்
எல்லா சிறை விளையாட்டுக்களுக்கும்
அவர்களுக்கு சிறியதொரு ஒளிரும் திரைமைதானம்
போதுமானதாகவே இருக்கிறது.

எந்திரன்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்
எமது குழந்தைகளுக்கு
எப்போதேனுமொரு பொழுதொன்றில்
அன்னியர்களாகி விடக்கூடும்
பெற்றோரும் கூட.


---xxx----

தீபிகா
01-07-2013
11.29 Pm






4 comments:

sathishsangkavi.blogspot.com said...

என்ன செய்வது பட்டணத்தில் படிக்கும் குழுந்தைகள் எல்லாம் இதை அனுபவித்துதான் ஆகவேண்டும்...

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை... கொடுமை... ஆனால் தவறு நம் மீது...!

கவியாழி said...

எப்போதேனுமொரு பொழுதொன்றில்
அன்னியர்களாகி விடக்கூடும்
பெற்றோரும் கூட.//நியாயமான கவலை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறை வைக்கப் பட்டிருக்கிறோம் என்பது தெரியாமல் உள்ளவர்களாக இருப்பதுதான் வேதனை

Post a Comment