More than a Blog Aggregator

Jul 9, 2013

மண்ணவன்

மண்ணவன்

ஒரு யுத்தத் தோல்வியில் 
சரணடைந்து கொண்ட அவனை
சீருடையில் காணப்பயந்த அவர்கள்
நிர்வாணமாக்கி நிறுத்தினார்கள்.

அப்போதும்
விடுதலையின் தாகமெரிந்து கொண்டிருந்த
அவன் விழிக்கிடங்குகளை பார்க்க அஞ்சியவர்கள்
கண்களை துணி கொண்டு கட்டினார்கள்.

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை அழுத்தி
சுடப்போவதாகக் கத்தியவர்களின் முன்னால்
அவன் கையெடுத்துக் கும்பிடாததால்
கைகளை பின்னால் பிணைத்துக் கட்டினார்கள்.

மரணத்துக்குப் பயந்த எந்த வார்த்தைகளையும்
அவன் உச்சரிக்க மறுத்ததால்
துப்பாக்கிப் பிடியால்
பற்களை நொருக்கிக் கொட்டினார்கள்.

இரத்தம் ஒழுகிற வாயோடு
அவன் அமைதியாக இருந்தான்.
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல.

ஆட்காட்டிக் குருவி
சாவுப்பாடலை அலறத் தொடங்கியிருந்த
ஒரு நள்ளிரவில்
பச்சைப் புற்களில் ரத்தம் பிசுபிசுத்த
சப்பாத்துப் பாதை வழியாக
அவர்கள் அவனை
பலிக்களத்துக்கு இழுத்துப் போனார்கள்.

நிலவு பார்த்துக் கொண்டேயிருக்க
அவனுடைய உயிர்ப் பூவை
பிடரியின் வழியாக அவர்கள் கொய்த போது
அவனது தாய் முத்தமிட்ட
நெற்றிப் பொட்டிலிருந்து
தாயின் குங்குமநிறக் குருதி வழிந்தோடியது.

அடுத்த பூவை இழுத்து வருவதற்கு
கோழைகள் திரும்பி நடந்தார்கள்.

விழுந்து கிடந்த வீரனின்
இறுகப் பொத்திய கைவிரல்களுக்கிடையால்
கொட்டுப்பட்டுக் கொண்டிருந்தது
அவனது தாய் மண்.

---xxx---


தீபிகா
22-06-2013
06.05 P.m

1 comment:

ஹேமா said...

அடிக்க அடிக்க வெறியேறுமே தவிர அடங்காத வீரம் !

Post a Comment