எம் பிள்ளைகளின் காற்று
நினைவிலூறுகிறது நெருப்பின் தணல்.
காடுகள் பாடும் கீதங்களில்,
பிரிவுத்தூளி அசைகிறது.
புல் மூடிய ஒற்றையடிப் பாதையில்
எவர் குரலையும் காணோம்.
மெளனத்தின் தவத்தில் இருக்கிறது
மரக்கட்டைப்பாலம்.
எந்தச் சிரிப்புக்களையும் கேட்கோம்!
சோகம் காய்ந்த இலைகளை
பரப்பி வைத்திருக்கிறது
தேக்கங்காடு.
யானை கடக்கும்
நெடுவெயில் பாதையில்,
ஆடுகிற மாலைமயில் எங்கே?
குரங்குகள் தாவும் வீரை மரங்களில்
கைபடாத பழங்கள் சிவந்திருக்கின்றன.
கூவிக்கூவித் தேடுகிறது குயில்.
ஒரு தலைகளுமற்று வாடியிருக்கிறது குளக்கரைப் பகல்.
கூடுதலாய் மொட்டுக் கட்டுகின்றன
நித்திய கல்யாணிகள்.
கையசைத்துக் கொண்டு போன
நம் பிள்ளைகளின் காற்று
மெதுவாய்
என் நெற்றி முட்டுகிறது.
- தீபிகா-
13.11.2025
07.33 pm.
நன்றி - படம்
#தீபிகா
#ஈழம்
#theepika
#மாவீரர்
#எம்_பிள்ளைகளின்_காற்று
#வன்னி
#தமிழ்

No comments:
Post a Comment