ஆடுபிழை
எதற்கிந்த மாலைகள்?
நானொரு,
அப்பாவி வெள்ளாடு.
கடப்புக்குள் நின்று
வாலாட்டிக் குதியங்குத்துகிற,
சோலியில்லாத சோனையாடு.
நீங்கள் பிழையாய் எண்ணுகிறீர்கள்.
திரும்பவும் சொல்கிறேன்.
எனது கழுத்து மணி
வெறும் சத்தத்துக்கு தான்.
சும்மா கிடந்த என் நெற்றிக்கு
சூடம் காட்டுகிறீர்கள்.
சந்தியில் நின்றவற்றையெல்லாம்
பிடித்துப் பிடித்துச் சபையேற்றி விட்டு,
கடைசியில்,
ஆடுகள் ஓநாய்களானதென்று
அழுது புலம்புவதே உங்கள் வரலாறு.
நானொரு போதும்,
ஒரு துரும்பும்
கிள்ளிப் போட்டதேயில்லை.
என்னை,
பப்பாசியிலிருந்து இறக்கி விடுங்கள்.
உங்களின்
கண்ணுக்கெட்டாத வறுமையும்,
எனக்கு விளங்குகிறது.
அதற்காக,
என்னை வேள்வியில் தள்ளாதீர்கள்.
நான்,
" மே! மே! " என்று கத்துகிற
மெல்லிய வாடல் ஆடு.
வேறெதுவும்,
என் திருவாயால் சுட முடியாது.
------ xxx --------
- தீபிகா-
11.11.2025
12.22 pm.
Tks - photo - M.Rajeev gandhi
#ஆடுபிழை
#தீபிகா
#கவிதை
#theepika
#ஈழம்

No comments:
Post a Comment