ஆசுவாசம்
காலொடிந்த பொம்மைக்கு
மருந்து கட்டுகிற குழந்தை முன்
உயிரற்ற சிறுவர்களைக் கிடத்துகிறது
தொலைக்காட்சி.
திரையை மூடச் சொல்லி அழும்
குழந்தையின் உலகை
விழுங்குகிறது சாம்பல்.
இரத்தமும், கண்ணீரும் வழியாத
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கவே முடியாதா அப்பா?
என்கிற குழந்தைக்கு
பதிலேயில்லை யாரிடமும்.
பசி நிரப்பும் அணில்களிடம்
முறைப்பாடு செய்கிறது குழந்தை.
உதிர்ந்த இலைகளின் வண்ணங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்குகிற
குட்டிக் கைகளுக்குள் விரிகிறது
கொஞ்சம் ஆசுவாசம்.
---- xxx --‐-
தீபிகா
02.11.2025
05.30 am
Tks - photo
#ஆசுவாசம்
#தீபிகா
#theepika
#கவிதை
#ஈழம்

No comments:
Post a Comment