More than a Blog Aggregator

Nov 15, 2025

மகன்

 மகன்

எப்போதும்,

காலுக்குள் நடந்தவன்

கையைவிட்டுப் போனான்

ஒரு நாள்.


வீடு முழுவதும்

சாம்பல் பூத்த இரவில்

அவனின் தாய்மடி

துக்கத்தை அள்ளிப் பருகியது.


மகனில்லாத வீட்டின் சாப்பாட்டில்,

உப்புக் கரித்தது.

சிரிப்பை மறந்த பூக்கள்

முற்றத்தின் சரணங்களாகின.


அமைதியின் இருளில்,

மகனின் முகம் எதிரொலித்தது.

எல்லா வரிகளிலும்,

நம் பால்வெள்ளியைத் தேடினோம்.


ஒரு நாள்,

படலை திறந்து கொண்டு வந்தது,

எங்களின் சூரியன்.


காட்டின் வைரம் குடித்து

கறுத்திருந்தது அந்த முகம்.

சேவலடித்து விருந்து வைத்தோம்.

ஊட்டிவிட்டு அழுதன தாய்விரல்கள்.


எல்லாவற்றிற்கும்,

சிரித்துச் சமாளித்தவன்

ஒரு குதிரை போலவே

புறப்பட்டுப் போனான்.


தவறவிட்டதாக வீடு நினைத்த

அவனது சாரத்தை,

தலையணையாக்கினாள் தாய்.


வெடிகளேறிய வானத்தை,

நெடுந்தொலைவிலிருந்து 

எல்லோருமாகப் பிரார்த்தித்தோம்.


- தீபிகா-

15.11.2025

09.40 pm.


Tks - painting


#தீபிகா 

#மகன்

#ஈழம் 

#தமிழ் 

#கவிதை

#மாவீரர்

No comments:

Post a Comment